தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் வழங்க வேண்டிய 34 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுவருகிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால், டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், காவிரி ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், கர்நாடக மாநில அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய தண்ணீரைப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்திவந்தனர்.
இந்நிலையில், நடப்பாண்டில் ஜூலை மாதம் வழங்க வேண்டிய நீரை வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், வழக்கமான அளவைவிட குறைவான அளவு தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடுவதாகவும், ஜூலை மாதத்திற்கான 34 டி.எம்.சி. தண்ணீர் பங்கீட்டை கொடுக்க வேண்டுமெனவும் அந்த கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்திக்க தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி சென்றுள்ள நிலையில், தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு இந்தக் கடிதத்தை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…