நிலவை ஆய்வு செய்வதற்காக 615 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் இந்த மாதம் 13ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
பூமிப்பரப்பில் இருந்து சுமார் 3 லட்சத்து 84ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ நிறுவனம் பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி, கடந்த 2008ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்தி உலக நாடுகளை இஸ்ரோ திரும்பிப் பார்க்க வைத்தது. சந்திரயான்-1 மூலம் நிலவில் தண்ணீர் இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அதன் தென்துருவத்தில் ஆய்வு நடத்தும் வகையில், கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. ஆனால், எதிர்பார்த்தபடி சந்திரயான்-2 விண்கலம் வெற்றிபெறவில்லை.
இதையடுத்து, 615 கோடி ரூபாய் திட்டத்தில் சந்திரயான்-3யை உருவாக்கும் பணியை இஸ்ரோ தீவிரமாக மேற்கொண்டுவந்தது. தற்போது அந்தப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் வரும் 13ம் தேதி சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள் சத்தீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 13ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாயும் என கூறப்பட்டுள்ளது. இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், இது குறித்துப் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், சந்திரயான்-3 விண்கலத்தை வரும் 13ம் தேதி விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன. இந்த முயற்சி ஜூலை 19ம் தேதி வரை நீடிக்கவும் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…