ஜிஎஸ்டி கவுன்சில் மத்திய மாநில அரசுகளுக்கு பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும், நிர்பந்திக்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சமமான அதிகாரம் உள்ளதாக தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு வரிக்கட்டமைப்பு முறை இருந்தது. இது மிகவும் சிக்கலான முறையாக இருந்ததால், இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி எனும் இந்த முறையின் மூலம் கிடைக்கும் வருவாயை மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன.
இந்த முறையில் வரி விதிப்பு, வரி மாற்றங்கள், நிலுவை தொகை போன்றவற்றில் பரிந்துரைகளை மேற்கொள்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. வரியை கூட்டுவது, குறைப்பது, நீக்குவது உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் இந்த கவுன்சிலே எடுத்து வருகிறது. இந்த கவுன்சிலில் மத்திய நிதியயைமைச்சர் மற்றும் பல மாநில நிதியமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியை ரத்து செய்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்ட மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
அவர்கள் தங்கள் தீர்ப்பில், "ஜனநாயகமும், கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கின்றன. ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை மட்டுமே வழங்க அதிகாரம் உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளை வழங்கலாமே தவிர, இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளை நிர்ப்பந்திக்க முடியாது.
ஜிஎஸ்டி விஷயத்தில் சட்டங்களை இயற்ற மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் உண்டு. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் அது நாட்டின் கூட்டாட்சி அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும்." என தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…