தமிழகத்தில் இன்று முதல் வரும் 6ம் தேதி வரை 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டலப்பகுதியில் நிலவும் சுழற்சியால் தமிழகத்திற்கு வரும் 6ம் தேதி வரை கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என்றும், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதேபோல், நாளை (ஜூலை.5) நீலகிரி கோவை மாவட்டங்களில் மிகக் கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும், வரும் 6ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும், தமிழகத்தின் தெற்கு மற்றும் வடக்கு கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடற்பகுதிகளில் மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்திலும், லட்சத்தீவு, கேரள கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோரப்பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசுவதால், மீனவர்கள் இன்றும் நாளையும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…