சந்திரயான் -3 செயற்கை கோள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ மற்றும் டிஆர்டிஓவில் பணியாற்றிய முன்னாள் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியார் அரசு மேல்நிலைப்பள்ளியில், தியாகம் போற்றுவோம் அமைப்பு சார்பில், சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு விழாவை போற்றும் வகையில் 75வது சுதந்திரதின அமுதப் பெருவிழா நேற்று நடந்தது.
நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விஞ்ஞானி சிவதாணுபிள்ளை மாணவர்களுடன் கலந்துரையாடினார். பிறகு மாணவர்களிடம் பேசிய அவர், "இந்தியாவின் வளர்ச்சியும், வல்லரசாக கூடிய தன்மையும் தற்போது அதிகமாகியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நம் நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாறும்.
நமது நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 செயற்கை கோள்களை விண்ணில் ஏவி சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களால் 75 செயற்கைகோள்கள் தயாரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது.
அரசு பள்ளியில் தமிழில் படித்தவர்களுக்கு ராக்கெட் அறிவியல் குறித்த பாடத்தை கற்று தருகிறோம். இதில், 500 பேர் பங்கேற்ற நிலையில், 110 பேரை தேர்வு செய்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அழைத்து சென்று செயற்கைகோள் ஏவும் விதம் குறித்து நேரடியாக விளக்கம் அளித்தோம்.
மேலும் இதில் சிறப்பாக செயல்பட்ட 25 மாணவர்களை தேர்வு செய்து ரஷ்யாவிற்கு அழைத்துச் செல்ல உள்ளோம். சந்திரயான்-3 செயற்கைகோள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதையொட்டி தற்போது இதற்கான சோதனை நடந்து வருகிறது.
சூரியனுக்கு, ஆதித்யா என்ற செயற்கைகோளை அடுத்த இரண்டு ஆண்டுகளில் அனுப்பவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது." எனக் கூறினார்.
முன்னதாக, விழா அரங்கில் பல்வேறு பள்ளி மாணவர்கள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை வரிசைப்படுத்தியிருந்தனர். கண்காட்சியை பார்வையிட்ட விஞ்ஞானி சிவதாணுபிள்ளை, மாணவர்களிடம் அவை செயல்படும் விதம் குறித்து கேட்டறிந்து, மாணவர்களை பாராட்டினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…