கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற ஐடிஐ மாணவரை முதலை நீருக்குள் இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வேளக்குடி கிராமத்தைச் சேர்ந்த திருமலை(18) என்ற இளைஞர் அங்குள்ள அரசு ஐடிஐயில் படித்து வந்தார். இவர் நேற்று மாலை தனது நண்பர்களான விஷ்ணு மற்றும் பழனி ஆகியோருடன் பழைய கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார்.
அங்கு முதலைகள் நடமாட்டம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில். மூன்றுபேரும் குளித்துக் கொண்டிருந்தபோது ஏதோ சத்தம் கேட்கவே, உடனடியாக கரைக்குத் திரும்பினர். அப்போது இவர்கள் குளிக்க பயன்படுத்திய சோப்பு ஆற்றின் கரையில் விழுந்துள்ளது.
அதை எடுக்க திருமலை முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக முதலை ஒன்று திருமலையின் காலை இழுத்துப் பிடித்து கவ்விச் சென்றது. இதையடுத்து அவரது நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சத்தமிட்டு முதலையை விரட்டியுள்ளனர்.
ஆனாலும் முதலை விடாப்பிடியாக திருமலையின் காலை கவ்விக்கொண்டு ஆற்றுக்குள் சென்றுவிட்டது. இதையடுத்து உடனடியாக தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து நீண்ட நேரம் தேடிய பிறகு, ஒரு புதரில் அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அந்த பகுதியில் முதலைகள் நடமாட்டத்தால் மனிதர்கள் உடலுறுப்புகளை இழப்பதும், உயிரை இழப்பதும் தொடர்கதையாக இருந்து வரும் நிலையில், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…