இந்தியாவின் 14வது துணை ஜனாதிபதியாக ஜகதீப் தன்கர் இன்று மதியம் 12.30 மணிக்கு பதவியேற்கிறார். அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
முன்னதாக துணை ஜனாதிபதியாக இருந்த எம் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10, 2022 அன்று முடிவடைந்தது. துணை ஜனாதிபதி ராஜ்யசபாவின் தலைவராகவும் உள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளர் ஜகதீப் தன்கர் நாட்டின் 14ஆவது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எதிர்கட்சிகளின் வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஆல்வா 182 ஓட்டுகள் மட்டுமே பெற்ற நிலையில், தன்கர் 528 வாக்குகளைப் பெற்றார். 1997 ஆம் ஆண்டுக்குப் பிறகு துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி வித்தியாசம் அதிகம் இருப்பது இதுவே முதல்முறையாகும். மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது குறிப்பிடத்தக்கது.
71 வயதான தன்கர் கடந்த 6 துணை ஜனாதிபதி தேர்தலில் இல்லாத அளவிற்கு 74 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட உடனேயே, பிரதமர் நரேந்திர மோடி அவரை சந்தித்து பெரும் ஆதரவுடன் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். "கிசான் புத்ரா" (விவசாயியின் மகன்) துணை ஜனாதிபதியாக இருப்பது இந்தியாவிற்கு பெருமையான தருணம் என்று கூறினார்.
2002 மற்றும் 2007 க்கு இடையில் பைரோன் சிங் ஷெகாவத்துக்குப் பிறகு ராஜஸ்தானில் இருந்து இரண்டாவது துணை ஜனாதிபதியாக தன்கர் பதவியேற்றார். தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் தலைவர்களும் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்களாக மாறியுள்ளனர். தற்போது ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக உள்ளார்.
ராஜஸ்தானில் ஜாட் சமூகத்தினருக்கு ஓபிசி அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்பான பிரச்சினைகளை தன்கர் வலியுறுத்தியுள்ளார். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை அறிவிக்கும் போது, பாஜக தன்கரை "கிசான் புத்ரா" என்று வர்ணித்தது.
இது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஜாட் சமூகத்தை சென்றடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நடவடிக்கை என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
எது எப்படியிருப்பினும், அதிரடிக்கு பெயர்போன மேற்கு வங்காளத்தின் முன்னாள் ஆளுநரான தன்கர், மாநிலங்களவைக்கும் தலைமை தாங்குவதால், எதிர்க்கட்சிகளின் ஆதிக்கம் சற்று அதிகம் இருப்பதால் பல்வேறு பிரச்சனைகளில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை எப்படி கையாள்வார் என்பது இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…