நாட்டையே உலுக்கிய சம்பவமாகவும், போராட்டம் கலவரமாகி வெகு நாள்களாக மக்களிடையே பேசப்பட்ட மறைந்த மாணவி ஸ்ரீமதி வழக்கில், மூடப்பட்ட பள்ளி குறித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கனியாமூரில் சக்தி மேல்நிலைப்பள்ளி என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. இந்தப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜூலை மாதம் 13 ஆம் நாள் பள்ளியிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவருடைய பெற்றோர்கள் பள்ளிக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பள்ளி மீது குற்றம் சாட்டி, போலீஸில் புகார் தெரிவித்தனர்.
இந்த நிலையில், போலீசார் புகாரைக் கண்டு கொள்ளாத நிலையில் மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் இணைந்து ஜூலை 17 ஆம் நாள் அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், போராட்டம் கலவராக மாறி, பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டு பள்ளி வாகனங்கள், வகுப்பறை, ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால், அந்தப் பள்ளி மூடப்பட்டு, மாணவர்களை வேறு இடங்களில் சேர்ப்பதற்கான வழிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் பிறகு, பல தரப்பட்ட கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு, பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டதுடன், அந்த பள்ளியை அரசு அமைத்த ஆய்வுக் குழு ஆய்வு செய்துள்ளது. பள்ளியை நிர்வாகி லதா, கல்வி அறக்கட்டளை சார்பில் மீண்டும் பள்ளியை திறப்பதற்கான அனுமதி அளிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இது விசாரணைக்கு வந்த பின்பு, மாவட்ட ஆட்சியர் அளித்த பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பள்ளி சீரமைப்புப் பணிகள் நடைபெற்றதாகவும், பள்ளியில் வகுப்புகள் நடக்க தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் முறையாக பங்கு பெற வில்லை எனவும் கூறப்பட்டது.
இதனையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதி, கனியாமூர் பள்ளியில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை ஒரு மாதத்திற்கு தொடங்க அனுமதி வழங்கியுள்ளார். ஒரு மாதத்திற்குப் பின், பள்ளியில் நிலவக்கூடிய சூழலைப் பொறுத்து மற்ற வகுப்புகள் தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். அது மட்டுமல்லாமல், பள்ளிகளுக்கு சில நாள்கள் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல் துறையினருக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…