கர்நாடகா: வேற்று ஜாதி இளைஞரை காதலித்து வந்த தனது மகளை நீரில் மூழ்கடித்து தந்தையே கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள குடத்தினி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம்கார் கவுடா (வயது 52). இவரது மனைவி சீதா. இந்த தம்பதிக்கு சுஹாஷினி என்ற மகள் இருந்தார். 20 வயதான சுஹாஷினி அதே பகுதியில் உள்ள கல்லூரியில் இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். ஒரே மகள் என்பதால் அவர் மீது பெற்றோர் அளவுக்கடந்த பாசம் வைத்திருந்தனர்.
இதற்கிடையில், சுஹாஷினி அதே கல்லூரியில் படிக்கும் வேற்று ஜாதியை சேர்ந்த இளைஞரை கடந்த ஒரு வருடமாக காதலிக்க வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஓம்கார் கவுடா வேறு ஜாதி பையனை காதலிக்காதே, இந்த காதல் வேண்டாம் என பல முறை எச்சரித்துள்ளார். ஆனால், சுஹாஷினியால் அந்த இளைஞருடனான காதலை விட முடியவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ஓம்கார் கவுடா தனது மகளையே கொலை செய்ய தீர்மானித்துள்ளார்.
அதன்படி, கடந்த மாதம் 31ம் தேதி கல்லூரிக்கு புறப்பட்ட மகளிடம், பக்கத்து தியேட்டரில் நல்ல படம் ஓடுகிறது. பார்த்து வரலாம் என ஓம்கார் அழைத்துள்ளார். இதை நம்பி சுஹாஷினியும் மகிழ்ச்சியாக சென்றுள்ளார். ஆனால், அவர்கள் போவதற்குள் படம் போட்டுவிட்டதால் அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு தனது மகளுக்கு பிடித்த உணவை வாங்கிக் கொடுத்தும், அவர் ஆசையாக கேட்ட தங்க மோதிரத்தையும் வாங்கிக் கொடுத்துள்ளார். அதன்பின்னர், அருகில் இருந்த பெரிய ஏரிக்கு சுஹாஷினியை அழைத்துச் சென்ற ஓம்கார் கவுடா திடீரென அவரை நீரில் தள்ளிவிட்டு அங்கிருந்து புறப்புட்டுவிட்டார். ஆனால், சுஹாஷினிக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், தகவலறிந்து வந்த போலீஸார் சுஹாஷினியின் உடலை மீட்டு அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அப்போது, மகளை நான் தான் கொலை செய்தேன் என்று ஓம்கார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் நண்பரின் உதவியுடன் மகளை தீர்த்துக்கட்டியது வெளிச்சத்திற்கு வந்தது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…