திருமணம் செய்துக்கொள்ளும்படி கேட்ட தனது லிவிங் பார்ட்ரனரான ஷர்தாவை கழுத்தை நெறித்து கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி டெல்லியில் பல இடங்களில் வீசிய அஃப்தப்பின் கொலை சம்பவத்தின் அதிர்வலையே இன்னும் அடங்காத நிலையில், முன்னாள் காதலியை கொன்று 6 துண்டுகளாக வெட்டிய கொடூரம் சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் அசம்கர் மாவட்டத்தை சேர்ந்தவர், பிரின்ஸ் யாதவ். இவரும் இஷாக் பூர் கிராமத்தை சேர்ந்த ஆராதனா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், அண்மையில் ஆராதனா வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஆராதனா பிரின்ஸ் யாதவுடன் தொடர்ந்து பழகி வந்திருக்கிறார்.
அதே நேரத்தில், தன்னைவிட்டு இன்னொருவரை திருமணம் செய்துக்கொண்டதால் ஆராதனா மீது பிரின்ஸுக்கு கோபமும் இருந்துவந்துள்ளது. ஆகையால், தன்னுடைய பெற்றோர் மற்றும் உறவினர் சர்வேஷ் உள்ளிட்டோரின் உதவியுடன் ஆராதனாவை கொலை செய்ய திட்டமிட்டுருக்கிறார் பிரின்ஸ். அதன்படி கடந்த நவம்பர் 9 ஆம் தேதி ஆராதனாவை பைக்கில் அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
அப்போது, உறவினரான சர்வேஷின் உதவியோடு கோவிலுக்கு பக்கத்தில் இருந்த கரும்புத் தோட்டத்துக்கு ஆராதனாவை அழைத்துச் சென்று, ஆராதனாவின் கழுத்தை நெறித்து கொன்று, அவரது உடலை 6 துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பையில் போட்டு கிணற்றில் வீசியிருக்கிறார் பிரின்ஸ்.
இந்தநிலையில், கடந்த நவம்பர் 15 ஆம் தேதி கிணற்றுக்கு அருகே அரை நிர்வாணமாக பெண்ணின் உடல் இருப்பதை பார்த்த உள்ளூர் மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளர். அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அனுப்பி வைத்துவிட்டு, விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணையில் தான் மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் அம்பலமாகியிருக்கிறது.
இதையடுத்து, பிரின்ஸ் யாதவை கடந்த நவம்பர் 19 ஆம் தேதி கைதுசெய்தனர். அதுமட்டுமல்லாமல், அவரிடம் இருந்து கூரிய ஆயுதங்கள், நாட்டு துப்பாக்கி உள்ளிட்டவையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், பிற உடல் பாகங்களை எடுப்பதற்காக பிரின்ஸை கொலை நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தும்போது, அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார் பிரின்ஸ்.
அதற்காக தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை சுட்டுள்ளார், உடனே போலீசாரும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த பிரின்ஸை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும், இக்கொடூர சம்பவத்திற்கு துணைபோன சர்வேஷ், மஞ்சு, சுமன், பிரமிளா யாதவ், ஷீலா, ராஜாராம், கலாவதி உள்ளிட்டோரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…