கர்நாடக மாநிலம் மங்களூரில் 13 வயது மதரசா மாணவர் ஒருவர், கடந்த திங்கட்கிழமை (27 ஜூன் 2022) தன்னை வேறொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கியதாகவும், தனது குர்தா அவர்களால் கிழிக்கப்பட்டதாகவும் கூறிய நிலையில், தற்போது இது தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மதர்சா மாணவர், வீடு மற்றும் பள்ளியில் தனக்கு முக்கியத்துவம் எதுவும் கிடைக்காததால், தன்னைப் பற்றி அனைவரும் பேசும்படி செய்ய இப்படி செய்ததாக வியாழன் அன்று (ஜூன் 30, 2022) விசாரணையின்போது தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளும் இதை உறுதிப்படுத்தியுள்ளன.
முன்னதாக சிறுவன் தாக்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து, இருவேறு சமூகங்களுக்கிடையே மோத வெடிக்கும் சூழல் உருவானது. இதனால் விரைவான நடவடிக்கை எடுத்த போலீசார் சிறுவனின் வாக்குமூலம், சம்பவம் நடந்த பகுதியின் சிசிடிவி கேமரா வீடியோ மற்றும் பிற ஆதாரங்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது சிறுவன் கூறியதற்கும், அந்த பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன. இதையடுத்து வியாழக்கிழமை மீண்டும் சிறுவனை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர்.
சிறுவனிடம் சிசிடிவி காட்சிகளை காட்டி விசாரித்தபோது முழு உண்மையையும் கூறியுள்ளார். மிகவும் ஏழை குடும்ப பின்னணியைக் கொண்ட அந்த சிறுவன், பள்ளியில் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி தனக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்பதாலும், தன்னை பற்றி அனைவரும் பேசும்படி செய்ய இதை செய்ததாக தெரிவித்துள்ளான்.
உண்மை தெரியவந்ததையடுத்து, போலீசார் அவரது பெற்றோர் மற்றும் சிறுவனின் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களை தொடர்பு கொண்டு பிரச்னையை தெரிவித்தனர். தற்போது அவரது வாக்குமூலத்தை குழந்தைகள் நலக் குழு மற்றும் மருத்துவர்கள் முன்னிலையில் போலீசார் மீண்டும் பதிவு செய்ய உள்ளனர்.
முதலில் சிறுவன் கூறியது என்ன?
சம்பவத்தன்று சிறுவன் சக்ரவர்த்தி மைதானத்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும்போது இரண்டு நபர்கள் பின்னாலிருந்து வந்து தன்னைத் தள்ளிவிட்டதாக சிறுவன் கூறினான். பின்னர் அவர்கள் சிறுவனது ஆடைகளைக் கிழித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர் என தெரிவித்துள்ளான். எனினும் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் தான் இதை செய்தார்கள் என்று சிறுவன் கூறவில்லை. யார் செய்தார்கள் என்று பார்க்கமுடியவில்லை என்றே கூறியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் தான் இதை செய்தார்கள் என அந்த சிறுவனின் சமூகத்தாரிடம் வதந்தி பரவ, இது இரு சமூகங்களுக்கிடையேயான மோதலாக வெடிக்கும் சூழல் ஏற்பட்டது. எனினும் ஒருவழியாக உண்மை தெரியவந்ததால் தற்போது அந்த பகுதியில் மோதல் சூழல் குறைந்துள்ளது.
ஒரு பொய்யால் மதக்கலவரத்தை உண்டாக்க பார்த்திருக்கானே இந்த பையன் என அந்த பகுதி மக்கள் நொந்துகொண்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…