மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில், பாஜக நடத்திய போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், நேற்று மாலை கொல்கத்தாவில் பாஜகவினர் போலீஸ்காரர் ஒருவரைத் துரத்தித் தடியால் அடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
பாஜகவின் வெளிமாவட்டத் தொண்டர்கள் கொல்கத்தாவில் நுழையும்போதே, அவர்களை குறிவைத்து போலீசார் நடத்திய தாக்குதல் தான் வன்முறைக்கு காரணம் என பாஜக கூறியுள்ளது.
பகலில், நகரின் சில பகுதிகள் போர்க்களமாக மாறியது. ஒரு தரப்பு கற்கள் மற்றும் கம்புகளை பயன்படுத்திய நிலையில், மற்றொரு தரப்பு, கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தினர். போலீஸ் வாகனமும் தீவைக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, எம்பி லாக்கெட் சட்டர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் வைரலாகும் ஒரு வீடியோவில், கொல்கத்தா காவல்துறையின் ஒரு அதிகாரியை பலர் அடிக்க முயல்வதுடன் வீடியோ தொடங்கியது. அவர் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள முயல முற்பட்டாலும், பாஜகவினர் தொடர்ந்து தாக்கியுள்ளனர். எனினும் அந்த போலீஸ்காரர் சுதாரித்துக் கொண்டு, தன்னைத் தாக்கியவர்களைத் தாக்கினார். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். எனினும், சிறிது நேரத்தில் சாலையோரம் நின்றிருந்த காக்கி உடையில் ஒரு அதிகாரியைப் பிடித்தனர்.
அவர் ஓடத் தொடங்கியதும், காவி சட்டை அணிந்து, பாஜக கொடிகளை ஏந்தியபடி ஏராளமானோர் விரட்டியடித்தனர். இறுதியாக காவலரைப் பிடித்த பாஜகவினர் மூங்கில் கம்புகளால் அவரைத் தாக்கியுள்ளார்கள். இறுதியாக உள்ளூர்வாசிகள் போல தோற்றமளித்த சிலர் அவரை மீட்டனர்.
இன்னும் அடையாளம் காணப்படாத அந்த அதிகாரியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கொடியை ஏந்திய போராட்டக்காரர்கள் காவல்துறையை குறிவைத்து தாக்குதல் நடத்திய வன்முறை வீடியோக்கள் குறித்து கேட்டதற்கு, பாஜக தலைவர் ஸ்வபன் தாஸ்குப்தா, இவை அனைத்தும் தாங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு வெளியே சம்பந்தமே இல்லாத இடத்தில் நடந்ததால், இதை நடத்தியது யார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார்.
மத்திய அமைச்சர் சுபாஷ் சர்க்கார், மாநில காவல்துறையை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் கொல்கத்தாவுக்கு வந்தபோது ரயில் நிலையங்களில் போராட்டக்காரர்களை குறிவைத்து, போராட்டத்தின் போது அவர்கள் மீது கற்களை வீசினர் மற்றும் மாநில செயலகத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் தடுப்புகளை வைத்தனர் என்று குற்றம் சாட்டினார்.
எனினும், தான் வன்முறையை நியாயப்படுத்தவில்லை என்று வலியுறுத்திய சுபாஷ் சர்க்கார், "போலீசார் சாமானிய மக்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். போலீசார் கூட்டத்தின் மீது கற்களை வீசினர். போலீசார் தாக்குதல் நடத்த ஆட்களை தூண்டினர். போலீசார் அமைதியான ஆர்ப்பாட்டத்தை வன்முறையாக மாற்றினர். இதனால் பொதுமக்கள் கோபமடைந்தனர்." என்றார்.
1993ல் கொல்கத்தாவில் 13 திரிணாமுல் தொண்டர்கள் கொல்லப்பட்ட காவல்துறை துப்பாக்கிச் சூட்டை மேற்கோள் காட்டி, தற்போது காவல்துறை மிகப்பெரிய நிதானத்தை காட்டியதாக திரிணாமுல் கட்சி கூறியுள்ளது. திரிணாமுல் கட்சியின் சௌகதா ராய், போராட்டக்காரர்களின் தாக்குதலுக்கு உள்ளான போதிலும், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
காவல்துறையினரைத் தூண்டிவிடுவதே பாஜகவினரின் நோக்கம் என்று கூறிய அவர், “பாஜகவினர் சரமாரியாக கற்கள் மற்றும் செங்கற்களை வீசியுள்ளனர், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பல காவலர்களை காயப்படுத்தியுள்ளனர், புர்ராபஜார் பகுதியில் கார்களை உடைத்துள்ளனர். வெகு சில பாஜகவினர் காயம் அடைந்துள்ளனர். ஒவ்வொரு டிவி திரையிலும் பாஜகவினர் கற்களை வீசுவதைக் காணலாம்." என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…