கோவில் திருவிழாவில் இனி ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க முடியாது என மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றிற்கு கோடைகால விடுமுறையாக மே 1 முதல் ஜூன் 1 வரை விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த விடுமுறை காலத்தில் 5 வாரங்கள் கோடைகால நீதிமன்றம் செயல்பட்டது. முதல் நான்கு கோடை விடுமுறை கால நீதிமன்றத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு சென்னை மற்றும் மதுரை கிளையில் ஆயிரக்கணக்கான மனுக்கள் தாக்கலானது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், ஆபாச நடனம், பாடல்கள் இருக்கக்கூடாது, பார்வையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளுடன் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கினர்.
இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திருச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இருந்து கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வேண்டும் என கோரி அளிக்கப்பட்ட மனுக்களின் மீதான விசாரணை நடைபெற்றது.
அப்போது, "கோயில் விழாக்களை வழக்கம் போல் நடத்திக்கொள்ளலாம். ஆனால் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க முடியாது. ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கும், கோயில் விழாவுக்கும் என்ன தொடர்பு உள்ளது? இதற்கு செலவாகும் பணத்தை நீர் நிலைகளைத் தூர்வாருவதற்கு பயன்படுத்தலாம்" என நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து பலர் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தனர். அதற்கு அனுமதி வழங்கி அந்த மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். மற்ற மனுக்களின் விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…