ஹைதராபாத்தில் நடந்த மற்றொரு திகிலூட்டும் சம்பவத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் கட்டப்பஞ்சாயத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தின் சந்தாநகரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அரவிந்த் எனும் இளைஞரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். சிறுமியின் சகோதரர் அரவிந்தின் குடும்பத்தாரிடம் சம்பவத்தை தெரிவித்தபோது, அரவிந்த் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தை அச்சுறுத்தியுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் ஊனமுற்ற தங்கையை கற்பழித்துவிடுவேன் என மிரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொல்லை தாங்க முடியாமல் சந்தாநகர் காவல் நிலையத்தை அணுகிய சிறுமி, புகார் தெரிவித்தார்.
போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்தாலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உடனடியாக விடுவிக்கப்பட்டதாகவும், அவர்கள் சமரசம் செய்து வழக்கை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தியதாகவும் சிறுமியின் குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட தரப்பின் சார்பாக வந்த ஆளும் டிஆர்எஸ் கட்சியின் கவுன்சிலர் ராகம் நாகேந்தர் யாதவ் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் சிறுமியின் குடும்பத்தை வழக்கை வாபஸ் பெறுமாறு கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சந்தாநகர் இன்ஸ்பெக்டர் கே காஸ்ட்ரோ, எஸ்ஐக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஓரளவு உண்மை என்றும், அவர் புதிதாக பணியமர்த்தப்பட்டவர் என்பதால் அவருக்கு நடைமுறை குறித்து சரியான புரிதல் இல்லை என்றும் கூறினார். மேலும் இந்த வழக்கில் கவுன்சிலருக்கு உள்ள பங்கையும் அவர் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, சமீபத்தில் 17வயது சிறுமி ஒருவர் ஹைதராபாத் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தற்போது அங்கு மேலும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக ஆளும் கட்சி கவுன்சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…