அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை(ஜூன்.20) தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.
அமெரிக்காவில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி, 21ம் தேதி ஐ.நா தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு தலைமையேற்கிறார். இந்த விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான மேரிமில்பென்னும் பங்கேற்கவுள்ளார். இவர் இந்தியாவின் 74வது சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் பங்கேற்று தேசிய கீதத்தை பாடி அசத்தியவர்.
ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்ற பின்னர், அரசுமுறை பயணம் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்துள்ள 3-வது உலக தலைவர் பிரதமர் மோடி ஆவார். இதற்கு முன்பு அவர் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ஆகியோரை அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக அழைத்து அவர்கள் சென்று வந்தனர்.
அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைநகர் வாஷிங்டன் செல்கிறார். 22-ந் தேதி அங்கு அவருக்கு வெள்ளை மாளிகையில் அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. பின்னர் அதிபர் பைடனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது, இரு தரப்பு உறவு, ராணுவ ஒத்துழைப்பு, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில் நுட்பங்களில் ஒத்துழைத்தல், எரிசக்தி, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்தப் பேச்சு வார்த்தையின்போது இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூன் 22ம் தேதி இரவு பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் சிறப்பு இரவு விருந்து அளிக்கவுள்ளனர். மேலும், நாடாளுமன்ற கீழ்சபை (பிரதிநிதிகள் சபை) சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி, மேல்சபை (செனட் சபை) ஜனநாயக கட்சி தலைவர் சுக் சூமர் ஆகியோரின் அழைப்பினை ஏற்று, அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இது அமெரிக்கா தனது நெருங்கிய நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கக்கூடிய கவுரவம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, 23-ந் தேதி துணை அதிபர் கமலா ஹாரீசும், வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனும் இணைந்து பிரதமர் மோடிக்கு மதிய விருந்து அளிக்கவுள்ளனர். வாஷிங்டனில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் வாஷிங்டன் ரொனால்டு ரீகன் கட்டிடத்தில் பிரதமர் சந்திப்பும் நடைபெறுகிறது.
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, வரும் 24, 25-ந் தேதிகளில் பிரதமர் மோடி, எகிப்து நாட்டில் முதல் முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அந்நாட்டு அதிபர் அப்தெல் பட்டா எல்சிசியின் அழைப்பினை ஏற்று பிரதமர் இந்த அரசு முறை சுற்றுப்பயணம் செல்கிறார். 2 நாட்கள் அங்கு பயணம் மேற்கொள்ளும் மோடி, தலைநகர் கெய்ரோவில் அதிபர் எல்சிசியுடன் பேச்சு வார்த்தை, அங்குள்ள இந்தியர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…