திருப்பூரில் பழ கடையில் வைக்கப்படும் பணம் தொடர்ந்து மாயமான நிலையில், அந்த பணத்தை எலி ஒன்று திருடிச் செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியிருப்பது கண்டு கடை உரிமையாளர் அதிர்ச்சியில் உறைந்தார்.
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மகேஷ் என்பவர் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தினசரி பணம் காணாமல்போவது வாடிக்கையாக இருந்துவந்தது. இரவு நேரங்களில் தான் வைத்துச் செல்லும் பணம், காலை வந்துபார்த்தால் மாயமாகி வந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஒவ்வொரு நாளும் இதே நிலை நீடித்ததால் 100 , 50 என வைத்து சோதித்து பார்த்தபோதும் பணம் மட்டும் காணாமல் போவது தொடர்ந்தது.
இதையடுத்து, கடையில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி அவர் கண்காணித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை கடைக்கு வந்து பார்த்த போது கல்லாவில் வைத்திருந்த பணம் காணாமல் போனது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது அவர் மேலும் அதிர்ச்சியடைந்தார்.
காரணம்.. அதிகாலை நான்கு மணி அளவில் பழங்களுக்கு இடையே புகுந்து வந்த எலி ஒன்று, கல்லா பெட்டியாக வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கூடையில் இருந்து பணத்தை எடுத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து, கடையில் இருந்த பொருட்களை வெளியேற்றி பார்த்தபோது எலி தங்கியிருந்த வலையை கண்டறிந்தார்.
அதில், இது நாள் வரையில் எலி திருடிய பணம் அனைத்தும் எந்தவித சேதமும் இன்றி இருந்துள்ளது. அதை எடுத்து எண்ணி பார்த்த போது 1500 ரூபாய் இருந்துள்ளது. பழங்களைத் திருடிவந்த காலம்போய், பணத்தை திருடி சேதப்படுத்தாமல் சேர்த்து வைத்திருந்த எலியின் செயல் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…