காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் தொடர்மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாகப் பெய்துவரும் தொடர் கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துவருகிறது. இதனால், ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 19.70 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2530 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 1,424 கன அடியாக இருந்தது.
தொடர்ந்து மழை நீடித்து வருவதால் ஏரிக்கான நீர்வரத்து மேலும் அதிகரித்துவருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டம் 20 அடியை நெருங்குவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஏரிக்கு வரும் நீரின் அளவையும், நீர்மட்ட உயரத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் இன்று அதிகாரிகளுடன் செம்பரம்பாக்கம் ஏரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். செம்பரம்பாக்கம் ஏரியின் ஐந்து கண் மதகு, 19 கண் மதகு ஆகியவற்றை ஆய்வு செய்த அவர், உபரி நீர் செல்லும் வழித்தடங்கள் குறித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு எவ்வளவு தண்ணீர் குடிநீராக மாற்றப்படுகிறது. கடைசியாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து எப்போது உபரி நீர் திறந்து விடப்பட்டது என்பது குறித்த பல்வேறு விவரங்களை அதிகாரிகளிடம் ஆட்சியர் கேட்டறிந்தார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள உள்வாங்கி கோபுரத்தில் ஆய்வு செய்தபோது, அங்கு பல இடங்களில் ஆபத்தான முறையில் பள்ளங்கள் திறந்து கிடந்தது. இந்த வழியாக வருபவர்கள் யாராவது விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டால் என்ன செய்வது? என அதிர்ச்சடைந்த ஆட்சியர், அது குறித்து அதிகாரிடம் பேசியதோடு, பள்ளங்களை உடனடியாக மூடும்படி உத்தரவிட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…