சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் நடந்து கொண்ட விதத்திற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு ஆளுநரை திரும்பி பெற வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
சென்னை தி.நகரில் அமைந்துள்ள பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசிய போது:- தமிழ் நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவி ஏற்றதிலிருந்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு தான் வருகிறார். இதன் காரணமாக தமிழ் நாட்டில் உள்ள பல கட்சிகளின் சார்பில் ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்து பலரும் அறிக்கைகளை வெளியிட்டும் உள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. குறிப்பாக இந்த போராட்டம் ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை ஆகும்.
ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக அனைத்து கட்சிகளும் கண்டித்து கண்டனங்களை தெரிவித்துள்ளது. அனைத்துக் கட்சிகளின் நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கது. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆகுகிறது ஆனால் எந்த ஒரு ஆளுநரும் மேற்கொள்ளாத நடவடிக்கையை இன்று தமிழக ஆளுநர் மேற்கொண்டுள்ளார். தமிழக ஆளுநர் ரவி வேண்டும் என்றே தமிழ்நாடு, திராவிடம், பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் உள்ளிட்ட வார்த்தைகளை குறிப்பிடாமல் சட்டப்பேரவையில் புத்தகத்தை படித்துள்ளார்.
இவ்வாறு ஆளுநர் செய்துள்ள செயல் அரசியல் சட்ட அமைப்பிற்கு விரோதமானது. இது வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் ஆளுநர் ரவி செய்துள்ளார் என்பது தான் எதார்த்தமான உண்மை. ஒன்றிய அரசின் கட்டளைகளை நிறைவேற்றுவராக ஆளுநர் ரவி செயல்பட்டு வருகிறார். ஆளுநர் ரவி இவ்வாறு செயல்படுவது ஏற்புடையதல்ல. அவர் ஏற்றுக்கொண்ட சட்டமைப்பிற்கு எதிரான ஒரு செயல் இது. இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மிகவும் பகிரங்கமான கண்டனத்தை தெரிவிக்கிறோம்.
அதேபோல் இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் ரவி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் அவர் இது போன்று மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது அருவெறுக்கத்தக்க மற்றும் கண்டிக்கத்தக்க ஒரு அரசியலுக்கு எதிரான செயலாகும்.
தமிழக ஆட்சியை கவிழ்ப்பதற்கும், போட்டி அரசியலை உருவாக்குவதற்கும் ஒன்றிய அரசு ஆளுநர் மூலமாக இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனவே இது போன்ற சம்பவத்தை சட்டப்பேரவையில் கண்டித்து தீர்மானம் ஏற்ற வேண்டும் என்றும் அதேபோல் ஒன்றிய அரசு ஆளுநரை திரும்பிப் பெற வேண்டும். குறிப்பாக அதிமுக பாஜக கூட்டணி உள்ள பாமக கட்சி கூட ஆளுநரின் செயலை கண்டித்து மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார் வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…