மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 343 குழந்தைகள் உட்பட 937 பேர் பலியாகியுள்ளதோடு, குறைந்தது மூன்று கோடி பேர் தங்குமிடமின்றி தவித்து வரும் நிலையில், பாகிஸ்தான் அரசாங்கம் நாட்டில் தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது.
இதில் சிந்து மாகாணத்தில் மட்டும் ஜூன் 14 முதல் நேற்று வரை வெள்ளம் மற்றும் மழை தொடர்பான சம்பவங்களால் 306 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலுசிஸ்தானில் 234 இறப்புகளும், கைபர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் முறையே 185 மற்றும் 165 இறப்புகளும் பதிவாகியுள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 37 பேர் உயிரிழந்த நிலையில், கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் 9 இறப்புகள் பதிவாகியுள்ளன.
பாகிஸ்தான் தேசிய பேரிடர் மீட்பு படையின் படி, பாகிஸ்தானில் ஆகஸ்ட் மாதத்தில் 166.8 மிமீ மழை பெய்துள்ளது, சராசரியாக 48 மிமீ மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 241 சதவீதம் அதிகமாகும். சிந்து மற்றும் பலுசிஸ்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன. அங்கு வழக்கத்தை விட முறையே 784 சதவிகிதம் மற்றும் 496 சதவிகிதம் அதிக மழை பொழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மழையின் அசாதாரண அதிகரிப்பு நாடு முழுவதும், குறிப்பாக பாகிஸ்தானின் தெற்குப் பகுதியில் திடீர் வெள்ளத்தை உருவாக்கியது. சிந்துவின் 23 மாவட்டங்கள் பேரழிவு பாதித்தவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இடைவிடாத அசுரத்தனமான மழைப்பொழிவு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதை கடினமாக்கியுள்ளது, குறிப்பாக ஹெலிகாப்டர் விமானங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2010ஆம் ஆண்டுக்கு பிறகு மிதமிஞ்சிய மழையால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானில், கிட்டத்தட்ட 30 மில்லியன் மக்கள் தங்குமிடம் இல்லாமல் உள்ளனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் உணவு இல்லை என்று அரசு கூறியுள்ளது.
மேலும் சர்வதேச நன்கொடையாளர்கள் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பாகிஸ்தான் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சர், மாகாணங்கள் தெரிவித்தபடி தகவல்களின்படி, தங்குமிடம் மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்படுவது மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகக் கூறினார்.
சிந்து மாகாணம் தங்குமிடங்களை அமைக்க 10 லட்சம் கூடாரங்களைக் கேட்டுள்ளது மற்றும் பலுசிஸ்தான் 1,00,000 கூடாரங்களைக் கோரியுள்ளது என்று தெரிவித்த அமைச்சர், அனைத்து கூடார உற்பத்தியாளர்கள் மூலம் அவை திரட்டப்பட்டு வருவதாகவும் வெளி நன்கொடையாளர்களிடமும் கூடாரங்களுக்காக அணுகப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…