பாகிஸ்தான் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் (IMF) நிர்ணயித்த கடுமையான முன்நிபந்தனைகளை செயல்படுத்த பெட்ரோலிய விலைகளை கடுமையாக உயர்த்தியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த முடிவு அமலுக்கு வந்த பிறகு அனைத்து பெட்ரோலியப் பொருட்களின் விலைகளும் லிட்டருக்கு சுமார் ரூ.14-19 வரை உயர்ந்தன.
பாகிஸ்தான் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.10 மற்றும் அதிவேக டீசல் (எச்.எஸ்.டி.), மண்ணெண்ணெய் மற்றும் லைட் டீசல் எண்ணெய் (எல்.டி.ஓ.) ஆகியவற்றுக்கு தலா ரூ.5 வரி விதித்துள்ளது.
இதனால், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.14.85ம், எச்எஸ்டி ரூ.13.23ம், மண்ணெண்ணெய் ரூ.18.83ம், எல்டிஓ ரூ.18.68ம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி பெட்ரோல் விலை இப்போது லிட்டருக்கு ரூ.248.74 ஆகவும், எச்எஸ்டி ரூ.276.54 ஆகவும், மண்ணெண்ணெய் ரூ.230.26 ஆகவும், எல்டிஓ விலை ரூ.226.15 ஆகவும் உள்ளது.
இது தொடர்பாக பேசிய நிதியமைச்சர் மிப்தா இஸ்மாயில், "இம்ரான் கான் தலைமையிலான முந்தைய அரசாங்கம் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களில் இருந்து விலகியதை அடுத்து, நான்கு மாதங்களுக்கு முன்பு இடைநிறுத்தப்பட்ட ஐஎம்எப் திட்டத்தை புதுப்பிக்க பெட்ரோலிய வரி விதிக்கப்பட்டது." என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
ஏப்ரலில் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பெட்ரோலியம் மீதான நான்காவது உயர்வு இதுவாகும்.
ஐஎம்எப், மின் கட்டணத்தை உயர்த்துவது மற்றும் பெட்ரோலியப் பொருட்களுக்கு வரி விதிப்பது போன்ற கடுமையான முன்நிபந்தனைகளை நிர்ணயித்துள்ளது. அரசாங்கத் துறைகளில் ஊழலைத் தடுக்கும் நோக்கில் தற்போதுள்ள அனைத்து சட்டங்களையும் மறுபரிசீலனை செய்ய ஊழலுக்கு எதிரான பணிக்குழுவை அமைக்குமாறும் பாகிஸ்தானை ஐஎம்எப் நிதியம் கேட்டுக் கொண்டது.
நிபந்தனைகளை நடைமுறைப்படுத்திய பிறகு, ஐஎம்எப் கடன் தவணையின் ஒப்புதலுக்கான பாகிஸ்தானின் கோரிக்கையை அதன் நிர்வாகக் குழுவிடம் முன்வைக்கும். இந்த நடைமுறையை முடிக்க இன்னும் ஒரு மாதம் ஆகும் எனக் கூறப்படுகிறது.
அதிக பணவீக்கம், சரியும் அந்நிய செலாவணி கையிருப்பு, விரிவடைந்துவரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் ரூபாய் மதிப்பு குறைவு போன்றவற்றால் பொருளாதாரத்தில் ஏற்கனவே தள்ளாட்டத்தில் உள்ள பாகிஸ்தான் மேலும் சிக்கல்களை எதிர்கொள்கிறது.
ஜூன் 22 அன்று, நிறுத்தப்பட்ட 6 பில்லியன் அமெரிக்க டாலர் உதவியை மீட்டெடுப்பதற்கும், பிற சர்வதேச மூலங்களிலிருந்து நிதியுதவி பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதற்கும் ஐஎம்எப் உடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் ஐஎம்எப் கூறிய அனைத்தையும் நிறைவேற்ற வேண்டிய சூழலில் உள்ளது
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…