காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இரண்டு நாள் பயணமாக இன்று மணிப்பூர் செல்கிறார். அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை அவர் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழும மைதேயி சமூக மக்களுக்கும், குகி பழங்குடியின மக்களுக்கும் இடையே பழங்குடியின அந்தஸ்து விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த பிரச்சனையால் இரு தரப்பினர் உருவான மோதல் கலவரமாக வெடித்து வன்முறையாக மாறியது. கடந்த 50 நாட்களாக அங்கு நீடித்துவரும் வன்முறையால் ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதோடு, மக்களும் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கலவரம் பாதித்த பகுதிகளில் இருந்த மக்கள், 349 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் கலவரம் தொடர்பாக சிபிஐ-ன் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், பாதுகாப்புக்காக துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முயற்சிகள் எதுவும் பலனளிக்காத நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று 2 நாள் பயணமாக மணிப்பூர் செல்கிறார்.
கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறும் ராகுல்காந்தி, பின்னர், இம்பால் மற்றும் சுராசந்த்பூர் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள சமூக அமைப்பு நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்காத நிலையில், ராகுல்காந்தி இன்று மணிப்பூர் செல்வது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…