ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஆனந்த் சிங்கின் வீட்டில் இருந்து ஏகே 47 துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்களை போலீசார் கைப்பற்றிய வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாட்னாவில் உள்ள எம்பி-எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
மோகாமாவைச் சேர்ந்த ஆர்ஜேடியின் "பாகுபலி" என அழைக்கப்படும் எம்எல்ஏவான ஆனந்த் சிங் தற்போது பாட்னாவின் பீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 16, 2019 அன்று, அப்போதைய நகர எஸ்பி லிபி சிங் தலைமையிலான பாட்னா காவல்துறையின் குழு, பர்ஹ் காவல் நிலையத்தின் கீழ் உள்ள அவரது சொந்த கிராமமான நட்வாவில் உள்ள ஆனந்த் சிங்கின் வீட்டில் சோதனை நடத்தியது.
அப்போது ஆனந்த் சிங் சட்டவிரோதமாக வைத்திருந்த ஏகே-47 துப்பாக்கியைக் கைப்பற்றியது. மேலும் அவரது வீட்டில் இருந்து இரண்டு கைக்குண்டுகள் மற்றும் 26 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கு விசாரணையின் போது அரசுத் தரப்பில் 13 சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. ஆனந்த் சிங் தரப்பு 34 சாட்சிகளையும் ஆஜர்படுத்தியது.
ஆனால் வழக்கு விஆசாரணையின்போது ஆனந்த் சிங் சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த வாரம் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், தற்போது அவருக்கான தண்டனை விபரம் நீதிமன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டு சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதால், அவரது எம்எல்ஏ பதவியும் பறிக்கப்பட உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…