ஈரோட்டில் சிறுமியிடம் கருமுட்டைகளை எடுத்து விற்பனை செய்தது தொடர்பாக சுகாதாரத்துறையில் உயர்மட்ட மருத்துவக்குழுவினர் மற்றும் காவல்துறையினர் தனியார் மருத்துவமனைகளில் தீவிர விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில் இந்த செயலில் ஈடுபட்ட பலர் சிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஈரோட்டில் போலி ஆவணம் தயாரித்து, 16 வயது மகளின் கருமுட்டைகளை தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்த தாய் சுமையா, அவரது இரண்டாவது கணவர் சையது அலி, இடைத்தரகர் மாலதி ஆகியோர் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சிறுமியின் வயதை அதிகரித்துக்காட்ட போலியாக ஆதார்கார்டு தயாரித்து கொடுத்த ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக ஈரோடு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி தலைமையிலான காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சிறுமியை கட்டாயப்படுத்தி ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளுக்கு கருமுட்டைகள் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
கருமுட்டைகளை விலை கொடுத்து வாங்கிய ஈரோடு மற்றும் பெருந்துறையில் செயல்படும் 2 மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பிய போலீஸார், அவர்களை ஏடிஎஸ்பி அலுவலகத்துக்கு அழைத்து நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சுகாதாரத் துறைசார்பில் மருத்துவர்கள் அடங்கியஉயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மருத்துவமனை நிர்வாகங்கள் தவறு செய்திருந்தால், அதன் உரிமம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது என்றனர். இதனிடையே சிறுமியின் கருமுட்டையை வாங்கி விற்பனை செய்த மருத்துவமனைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளும் தயாராகி வருகின்றனர். மேலும் கருமுட்டையை வாங்கியவர்கள் யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…