தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 300 ரேஷன்கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியக் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துவருகிறது. மழை, வெயில் பாதிப்பு உள்ளிட்டவற்றால் செடிகள் கருகி, உற்பத்தி குறைந்ததால், தக்காளி வரத்து பாதிக்கட்டுள்ளது. இதனால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தக்காளி கிலோ 100 வரை விற்பனையானது. கடந்த சில நாட்களாக கிலோ ரூ.110 முதல் ரூ.130 வரை விற்கப்படுகிறது.
தக்காளி தட்டுப்பாட்டைப் போக்கும் வகையிலும், குறைந்த விலையில் மக்களுக்கு தக்காளி கிடைக்க வகைசெய்யவும் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி, சென்னையில் 80க்கும் மேற்பட்ட ரேஷன்கடைகள் மற்றும் பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி , சென்னையில் அமல்படுத்தப்பட்ட திட்டத்தின் நீட்சியாக, இன்று முதல் தமிழகம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி, சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் நடமாடும் காய்கறி கடைகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டுமென தமிழக அரசுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…