மாண்டஸ் புயல் காரணமாக மாமல்லபுரம் கடற்கரை சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. மாண்டோஸ் புயல் நெருங்கி வரும் சூழலில் மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகின்றது. கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம், பூஞ்சேரி, கல்பாக்கம், வாயலூர், புதுபட்டினம், கூவத்தூர், ஆகிய பகுதிகளிலும் சாரல் மழை பெய்து வருகின்றது.
புயல் எதிரொலியாக மாமல்லபுரத்தில் நான்காவது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் கொந்தளித்து காணப்படுவதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது தீவிர புயலாக உள்ள மாண்டஸ் புயல் அடுத்த 3 மணி நேரத்திற்குள் புயலாக வலுவிழக்கக்கூடும் என்றும், புயலானது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு 11.30 மணிக்குள் அல்லது நாளை அதிகாலை 2.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரிக்கும் - ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கும் இடைப்பட்ட இடத்தில் மாமல்லபுரத்தை ஒட்டியுள்ள இடத்தில் கரையைக் கடக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மாமல்லபுரம் கடலில் 10 அடி உயரத்திற்கு மேல் அலைகள் சீற்றத்துடன் எழுந்து வருகின்றன. இதனால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை சுற்றி கடல் நீர் தேங்கியுள்ளது. மாமல்லபுரம் அருகே இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புயல் கரையை கடக்கும் என்பதால் மாமல்லபுரத்தில் காற்றின் வேகமும் அதிகரித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…