கடுமையான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை போராடி வரும் நிலையில், தலைமறைவான ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச, இன்று தனது ராஜினாமாவை அறிவித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலகியுள்ள நிலையில், அரசியல் ஸ்திரமற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று போராட்டக்காரர்கள் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரப்பூர்வ இல்லத்தை முற்றுகையிட்டதால், அவர் ரகசிய இடத்திற்கு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து ஜூலை 13 ஆம் தேதி ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து, கோத்தபயவும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
பொருளாதாரச் சரிவு காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு, உணவு, எரிபொருள் மற்றும் பிற தேவைகளை வாங்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருவதால் கடும் கொந்தளிப்பான சூழல் அங்கு நிலவுகிறது.
அடுத்து என்ன நடக்கும்?
கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ள நிலையில், இலங்கை நாடாளுமன்றம் தனது உறுப்பினர்களில் ஒருவரை அதிபராக தேர்ந்தெடுக்க வேண்டும். ஜனாதிபதி பதவி விலகிய ஒரு மாத காலத்திற்குள் புதிய நியமனம் செய்யப்பட வேண்டும்.
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தற்போதைய பிரதமர் தற்காலிக ஜனாதிபதியாக வருவார். எனவே, ராஜபக்சே ராஜினாமா செய்த பின், மீண்டும் அதிபர் பதவி நிரப்பப்படும் வரை, ரணில் விக்ரமசிங்கே தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்பார்.
இதற்கிடையே இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்குள் நுழைந்து தீ வைத்து எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…