பாஜக தொடர்ந்துள்ள அவதூறு வழக்கில் ராகுல் காந்தி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோருக்கு பெங்களூர் பெருநகர கூடுதல் நடுவர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
அவதூறு வழக்கு ஒன்றில் ஏற்கனவே குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்திக்கு எதிராக மற்றொரு அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்தி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் ஆஜராக பெங்களூரு பெருநகர கூடுதல் நடுவர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு ஜுலை 27ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. முன்னதாக, கர்நாடக பாஜக மாநில செயலாளர் கேசவபிரசாத் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், மே 5ஆம் தேதி, காங்கிரஸ் சார்பில் வௌியிடப்பட்ட செய்தித்தாள் விளம்பரத்தில் அரசு ஒப்பந்தங்களில் பாஜக அரசு 40 சதவீத ஊழலில் ஈடுபட்டதாகவும், முந்தைய 4 ஆண்டுகளில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்ததாகவும் குறிப்பிட்டிருந்ததாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது என்றும் பொய்யான பிரச்சாரத்தின் காரணமாகவே தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததாகவும் மனுதாரர் குறிப்பிட்டார். முந்தைய பாஜக ஆட்சியில் பல்வேறு அமைச்சகங்கள் சார்பில் மேற்கோள்ளப்படும் அரசு ஒப்பந்தங்களில் அதிகாரிகள் 40 சதவிகிதம் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை முக்கிய விவகாரமாக கையில் எடுத்த காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது. குறிப்பாக, அப்போதைய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய காங்கிரஸ், "PayCM" என்ற பிரசாரத்தை மேற்கொண்டது. இது மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியது. ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும், தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது பாஜக நடவடிக்கை எடுக்கவில்லை என ராகுல் காந்தி, சித்தராமையா உள்ளிட்டோர் கர்நாடக தேர்தலில் பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…