முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் முழு உருவச்சிலை சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கையை தமிழக அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டுமென சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில், நேற்று மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சமூக நீதி காவலர், பிற்படுத்தப்பட்ட மக்களின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு மரியாதை செய்யும் விதமாக, சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் விதி 110-ன்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்.20-ம் தேதி அறிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சராகவும், மத்திய அரசில் வர்த்தகம், வெளியுறவு, நிதி, பாதுகாப்பு என முக்கிய துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்தவர் வி.பி.சிங். பின்னர், தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ஆனார். அவர் பிரதமராக இருந்தது 11 மாதங்கள்தான் என்றாலும், அதற்குள் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்துக்கு அரசு பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம் என்ற மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தியவர் வி.பி.சிங் என்றும், அத்தகைய சமூக நீதி காவலருக்கு, ஏற்கெனவே சட்டப்பேரவையில் அறிவித்தபடி, சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர் பேரவை மற்றும் பேராசிரியர்களின் வேண்டுகோளை ஏற்று, சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் முழு உருவ கம்பீரச் சிலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…