மத்திய அரசு விருது பெற்ற திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வலியுடன் சிகிச்சைக்கு வந்த கர்ப்பிணி பெண், உரிய சிகிச்சை வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் அருகே உமரிகாடு எனும் பகுதியைச் சேர்ந்த 22 வயதான துர்கா நிறைமாத கர்ப்பிணி ஆவார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக திருச்செந்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், துர்காவை தனியார் ஸ்கேன் சென்டருக்கு போய் ஸ்கேன் எடுத்து வருமாறு மருத்துவர் சியாமளா கூறியுள்ளார். இதையடுத்து துர்காவும் பிரசவ வலியுடனேயே தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்து வந்துள்ளார். பின்னர் மருத்துவர், இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்களுக்கு குழந்தை பிறந்து விடும் எனக் கூறி தூத்துக்குடி மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.
மேலும், தூத்துக்குடி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் பொறுப்பல்ல என எழுதி தந்து விட்டு செல்லும்படி வற்புறுத்தியுள்ளார். ஏற்கனவே பிரசவ வலியுடன் அவதிப்பட்டு வந்த துர்கா இதனால் செய்வதறியாது திகைத்தார்.
தூத்துக்குடி செல்ல ஒரு மணி நேரம் ஆகும் நிலையில், இடையில் ஏதாவது நடந்தால் என்ன செய்வது என பயந்த துர்கா, திருச்செந்தூர் அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டிலிருந்து நடந்தே வெளியேறி, ஆட்டோ பிடித்து அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அலைக்கழித்ததோடு, அவரை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பாமல் மோசமாக நடந்து கொண்ட மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நோயாளிகளை மிகவும் கையாளும் மருத்துவமனைக்கான மத்திய அரசின் விருது சமீபத்தில் தான் இந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது இதுபோன்ற ஒரு மோசமான சம்பவம் மருத்துவமனையில் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…