தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வுபெறவுள்ள நிலையில், டெல்லியில் நாளை புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான பணி நடைபெறுகிறது.
தமிழக காவல்துறையின் தலைமை டிஜிபியாக இருந்துவரும் சைலேந்திரபாபு வரும் 30-ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். ஏற்கெனவே, சைலேந்திரபாபு ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு பெற்றிருந்த நிலையில், இம்மாத இறுதியில் அந்தப் பணியை நிறைவு செய்கிறார்.
இந்நிலையில், தமிழகத்திற்கான புதிய சட்டம் - ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளன. புதிய டிஜிபி தேர்வுப் பட்டியலை தயார் செய்வற்கான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை(ஜூன்.22) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறைச் செயலர் அமுதா, தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனர்.
தமிழகத்திற்கான புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபிக்கான போட்டியில் டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா, பி.கே.ரவி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், முன்னாள் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தீயணைப்புத் துறை இயக்குநர் ஆபாஷ் குமார், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநர் சீமா அகர்வால் ஆகியோர் உள்ளனர். டெல்லியில் நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இந்தப் பட்டியலில் இருந்து 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இறுதி செய்யப்படவுள்ளனர்.
தற்போதைய நிலையில் சஞ்சய் அரோரா, சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் ஆகிய 3 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்படலாம் என டிஜிபி அலுவலக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மூவரில் ஒருவரையே தமிழக டிஜிபியாக தமிழகஅரசு தேர்வு செய்யும் எனவும், தற்போதைய நிலவரப்படி முதல் இரண்டு இடங்களில் சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன் உள்ளதாகவும், தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபி யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 28ம் தேதி வெளியாகும் எனவும் டிஜிபி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…