கடந்த ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்படாத சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக வெளியான ஒரு அறிக்கையின்படி, தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் டி20 லீக்களில் பங்கேற்பதற்காக, ஐபிஎல் மற்றும் உத்தரபிரதேச அணிகளில் இனி விளையாட மாட்டார் என தெரிகிறது.
“நான் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். உத்தரபிரதேச கிரிக்கெட் அணிகளில் சில உற்சாகமான இளைஞர்கள் வருகிறார்கள். நான் ஏற்கனவே உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கத்திடம் எனது தடையில்லா சான்றிதழை பெற்றுள்ளேன். எனது முடிவைப் பற்றி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லாவிடம் தெரிவித்துள்ளேன்” என்று ரெய்னா கூறியதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் எனில் இந்திய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் மட்டுமல்லாது, உள்ளூர் முதல் தர போட்டிகளில் விளையாடுவதையும் நிறுத்தினால் மட்டுமே பிசிசிஐ அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, செப்டம்பர் 10ஆம் தேதி தொடங்கும் சாலை பாதுகாப்பு உலகத் தொடரில் விளையாடுகிறார்.
“நான் சாலை பாதுகாப்பு தொடரில் விளையாடுவேன். தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த டி20 உரிமையாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டனர், ஆனால் நான் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.” என்று கடந்த ஒரு வருடமாக காஜியாபாத்தில் உள்ள ஆர்பிஎல் கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி செய்து வரும் ரெய்னா கூறினார்.
ஆகஸ்ட் 15, 2020 அன்று எம்.எஸ்.தோனி ஓய்வை அறிவித்த ஒரு மணி நேரத்திற்குள் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரெய்னாவும் அறிவித்தார். தோனியின் கீழ் 2011 உலகக் கோப்பை வென்ற அணியில் ரெய்னா இருந்தார்.
ரெய்னா 18 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். குறுகிய காலத்திற்கு அணிக்கு கேப்டனாக இருந்த பெருமையும் அவருக்கு கிடைத்தது. இந்தியாவுக்காக ரெய்னா 226 ஒருநாள் போட்டிகளில் 5615 ரன்களும், 78 டி20 போட்டிகளில் 1605 ரன்களும் குவித்துள்ளார். டெஸ்டில் அறிமுகத்தில் சதம் அடித்த ரெய்னா, ஆட்டத்தின் மூன்று வடிவங்களிலும் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார், மேலும் அவரது சதங்கள் இந்தியாவுக்கு வெளியே அடிக்கப்பட்டன.
12 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸின் முதுகெலும்பாக இருந்த ரெய்னா, ஐபிஎல் வரலாற்றில் 205 ஆட்டங்களில் 5,528 ரன்களுடன் அதிக ரன்களை எடுத்தவர்களில் நான்காவது இடத்தில் உள்ளார். சிஎஸ்கே அணிக்காக மட்டும் 4,687 ரன்கள் எடுத்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…