ஒவ்வொரு தமிழ் மாதமும் சிறப்பு வாய்ந்தவை தான். இருப்பினும், அவற்றில் சில மாதங்கள் மட்டுமே இறைவனுக்கு உகந்த மாதமாக இருக்கின்றன. அப்படி இறைவனுக்கு உகந்த மங்களகரமான மாதம்தான் இந்த ஆடி மாதம். இந்த மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் விஷேசமானதாக கருதப்படுகிறது. தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என முருகப் பெருமானை வழிபடுவதற்கு வருடத்தில் எத்தனையோ நாட்கள் இருந்தாலும், மாதந்தோறும் வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்கள் என்றால் சஷ்டி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் தான்.
மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் தை, கார்த்திகை, ஆடி மாதங்களில் வரும் கிருத்திகை மிகவும் விஷேசம். அந்தவகையில், இந்த வருடம் ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 9 ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் விரதமிருந்து முருகப் பெருமானை வணங்கினால், திருமண தடை, கடன் தொல்லை, வீடு - மனை சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். வாழ்க்கையில் செல்வ செழிப்பு ஏற்படும். செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
ஆடி கிருத்திகை தினத்தன்று அதிகாலை வேளையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு முருகனை மனதில் நினைத்துக் கொண்டு விரதத்தை தொடங்க வேண்டும். இடையில் தண்ணீர் அருந்திக்கொள்ளலாம். சாப்பிட்டாக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் அந்நாள் முழுவதும் உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு எளிமையான விரதம் இருக்கலாம். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் பூஜையறையில் முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறு கோண கோலம் இட்டுக் கொள்ளவும்.
பின்பு முருகப் பெருமானின் படத்திற்கு செவ்வரளி, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர்கள் அல்லது வாசனை மிகுந்த வெள்ளை நிற மலர்களால் அலங்கரித்துக் கொள்ளவும். அதன்பிறகு, படத்தின் இருபுறமும் நெய் தீபமேற்றி, வாழை பழம் நிவேதனம் வைத்து தீப, தூர ஆராதனை காட்டிய பிறகு 'ஓம் சரவணபவ' என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபட வேண்டும். அதன்பிறகு, அருகாமையில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…