தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதிலும் அம்மனுக்கு உகந்த சிறப்புவாய்ந்த மாதமான ஆடியில் வரும் அனைத்து நாட்களும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடி பெருக்கு, ஆடி பூரம் என பல சிறப்புகளை கொண்ட ஆடி மாதம் இந்த ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று பிறக்கிறது. இதில் விஷேசம் என்னவென்றால், ஆடிப் பிறப்பன்றே அமாவாசையும் வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடி மாதத்தின் முதல் நாளன்று செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
ஆடியின் முதல் நாளே 'ஆடி பிறப்பு' என்பார்கள். இந்த ஆடி 01 அன்று சேலம், கரூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மகாபாரத போரின் முதல் நாளில் அரவாணுக்கு பழிகொடுத்ததன் நினைவாக தேங்காய் சுடுவது என்ற வழக்கம் கடைக்கப்பிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், தெய்வ வழிபாட்டிற்கு உகந்த மாதத்தின் முதல் நாளான ஆடி பிறப்பன்று, காலை அல்லது மாலை நேரத்தில் அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு அம்மனை மனதார வழிபாடு செய்துவர பல நன்மைகளை கொடுக்கவல்லது. அதேபோல், அன்றைய தினம் அசைவ உணவுகளை தவிர்த்துவிட்டு, சைவ உணவுகளை எடுத்துக் கொள்வது சிறப்பு.
ஆடி பிறப்புக்கு முன்னாடி நாளே வீட்டை சுத்தம் செய்துவிடுங்கள். அதேபோல், வீட்டின் பூஜையறை பொருட்களையும் சுத்தம் செய்துவிடவும். பின்னர், ஆடி பிறப்பன்று பூஜையறையில் இருக்கும் அம்மன் புகைப்படத்திற்கு பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு, ஒரு சிறிய பித்தளை அல்லது செம்பு செம்பில் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொண்டு, அதில் சிறிதளவு மஞ்சள் தூள், சிறிதளவு வேப்பிலை, வாசனைக்கு சிறிதளவு பச்சை கற்பூரம் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த தீர்த்ததை அம்மன் புகைப்படத்திற்கு அருகில் வைத்துவிடுங்கள்.
உங்களால் முடிந்தால் பழங்கள் வாங்கியும் படையல் போடலாம். பின்னர் எளிமையான நெய்வேத்தியமாக சர்க்கரை பொங்கல் தயார் செய்து படைத்துக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டு முறையை ஆடி முதல் நாள் காலையிலோ (8மணிக்குள்) அல்லது மாலையிலோ செய்யலாம். பின்னர், உங்களுடைய குலதெய்வத்தை மனதார நினைத்து பிராத்தனை செய்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் குலதெய்வத்தின் முழுமையான அருளை பெறலாம். முடிந்தால் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாட்டு வாருங்கள்; இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
குறிப்பு: பூஜை முடிந்து அடுத்த நாள் காலை அல்லது மாலை நேரத்தில் வழிபாட்டிற்கு உபயோகித்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்துவிட்டு, மீதமிருக்கும் தீர்த்தத்தை கால் படாத இடத்தில் கொட்டிவிடவும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…