ஓசூர் பிரித்தியங்கரா திருக்கோவிலில் கார்த்திகை மாத பௌர்ணமி சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு நடைபெற்ற மிளகாய் வத்தல் யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற பிரத்தியங்கிரா தேவி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர். தொடர்ந்து நடைபெற்ற மிளகாய் வத்தல் யாகத்தில் கலந்து கொண்டு ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
மோரணப்பள்ளி கிராமத்தில் பிரத்தியங்கிரா கோயிலில், மூலவராக பிரத்தியங்கிரா தேவி அம்மன் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார். அதேபோல கால பைரவர் மற்றும் ராகு கேது ஆகிய தெய்வங்களும் தனி சன்னதி கொண்டுள்ளனர்.
இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும், கண் திருஷ்டி நீங்கவும், செய்வினை, பில்லி சூனியம், துஷ்ட சக்திகள் போன்றவற்றை அகற்றும் விதமாகவும் மிளகாய் வத்தல் கொண்டு சிறப்பு யாகங்கள் நடத்தப்படுவது வழக்கம்.
மேலும் கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி தினம் இன்று வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.
அந்த வகையில், மாலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, விசேஷ அலங்காரங்களுடன் அம்மன் அருள் பாலித்தார். அதேபோல ராகு, கேது, காலபைரவர் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்து வெள்ளிக்கவசம் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு மங்கள ஆரத்தி காட்டி பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, இரவு நடைபெற்ற யாக சாலையில் மிளகாய் வத்தல் யாகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில், தமிழகம் மட்டும் இன்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து கலந்து கொண்டு திருஷ்டி கழிக்கும் விதமாக மிளகாய் வத்தலை யாக குண்டத்தில் செலுத்தி சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…