சதுரகிரி மலைக்கு செல்வதற்கு வழக்கமாக அமாவசை மற்றும் பவுர்ணமி சமயத்தில் 4 நாட்கள் தொடர்ச்சியாக அனுமதி வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில், தற்போது நவராத்திரியை முன்னிட்டு, பக்தர்கள் மலையேறுவதற்கு இன்று முதல் தொடர்ச்சியாக 13 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் அமைந்துள்ள மகாலிங்க சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வாடிக்கை. கோவில் வனப்பகுதியில் அமைந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டும் மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அதே சமயம் மழைபெய்யும் நாட்களில் காட்டாற்று வெள்ளம் அதிகம் வரும் என்பதால் பக்தர்களுக்கு அந்த சமயத்தில் அனுமதி வழங்கப்படாது.
அந்த வகையில் புரட்டாசி பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி நவராத்திரி விழா தொடங்குவதால் அதற்கும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டு இன்று முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக 13 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த 13 நாட்களும் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இரவில் கோவிலில் தங்க அனுமதி கிடையாது. இடையில் மழை பெய்தால் அந்த நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…