ஆந்திராவில் அமைந்துள்ள பிரபல திருப்பதி ஏழுமலையான் கோயிலின் தங்க கோபுரம் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலில் திருமலை-திருப்பதி தேவஸ்தான விதிமுறைகளின்படி, கோயிலுக்குள் மின்சார மற்றும் மின்னணு சாதனப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை எடுத்துச் செல்வதும், அதன் மூலம் வீடியோ எடுப்பதும் குற்றமாகும். அதேபோல், வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திலிருந்து இரண்டு கட்ட சோதனைகளுக்குப் பிறகு தான் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். அங்கு சோதனைக் கருவிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் கோயிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் தன்னுடைய செல்போனை பயன்படுத்தி கோயிலின் ஆனந்த நிலையம் எனப்படும் தங்க கோபுரம் மற்றும் கருவறைக்குச் செல்லும் வழி உள்ளிட்டவற்றை வீடியோ எடுத்துள்ளார். எடுத்ததோடு மட்டுமல்லாமல் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ வைரலானதையடுத்து கோயிலுக்குள் சென்ற பக்தர் கையில் எப்படி கேமரா வந்தது? கோயில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அலட்சியமா? என பல்வேறு தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் வெடித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் திருப்பதி திருமலை தேவஸ்தானம் நிர்வாகத்திற்குத் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் உடனடியாக கோயில் பாதுகாப்பு அமைப்புகளின் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை பதிவு செய்தவர் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வீடியோ எடுத்தவர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்குள் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் பதிவுகள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வீடியோ எடுத்த நபரை கண்டுபிடிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், வீடியோ எடுத்த நாளன்று திருமலை திருப்பதி கோயிலில் கனமழை பெய்ததாகவும், அப்போது 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டிருந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டு அந்த நபர் செல்போனை உள்ளே எடுத்துச் சென்றிருக்கலாம் எனவும் தேவஸ்தானம் யூகித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…