பெருமாளுக்கு உகந்த மாதமான மார்கழியில் வருடா வருடம் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியை திருஅத்யயன உற்சவம் எனவும் அழைப்பர். இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி வருகின்ற ஜனவரி 2 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்த மங்களகரமான நாளில் சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தரும் பெருமாளை இரவு முழுவதும் கண் விழித்து விரதமிருந்தும் வழிபாடு செய்வது சிறப்பு. இந்த நாளில் விரதம் இருப்பது வருடம் முழுவதும் விரதம் இருப்பதற்கு சமம். அதுமட்டுமல்லாமல், ஏகாதசி விரதம் இருந்து பெருமாளை மனதார வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் பாவங்கள் அனைத்தும் நீங்குவதுடன், மோட்சமும் கிடைக்கும். சரி வாங்க வைகுண்ட ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வைகுண்ட ஏகாதசியிலாவது விரதம் இருந்தால் சிறப்பான பலனை அடையலாம்.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதற்கு முன் தினமான தசமி நாளில் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்தவுடன் நீராடிவிட்டு, 3 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரதமபத வாசல் திறப்பு நிகழ்வை நேரில் கோவிலுக்கு சென்றோ அல்லது டிவி நேரலை வழியாகவோ காண வேண்டும்.
சொர்க்க வாசல் திறந்த பிறகு விரதத்தை தொடங்க வேண்டும். ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருக்க வேண்டும்.
தண்ணீர் குடிக்கலாம். தண்ணீரில் துளசி இலைகள் போட்டு தீர்த்தமாக பருகலாம். முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
குழந்தைகள், வயதானவர்களாக இருந்தால் அவல், பொரி, கடலை, பழச்சாறு போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம். அன்று மாலை அருகில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும்.
இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு நாமாவளி, நாலாயிர திவ்ய பிரபந்த போன்ற நாமங்களை பாராயணம் செய்து, இரவு முழுவதும் தூங்காமல் இருக்க வேண்டும்.
அப்படி இல்லையென்றால், "ஓம் நமோ நாராயணாய " என்ற எட்டெழுத்து மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை பாராயணம் செய்யலாம்.
பிறகு, ஏகாதசிக்கு அடுத்த நாள் (துவாதசி அன்று) அதிகாலையிலேயே குளித்து, விரதத்தை நல்ல படியாக இருக்க அருள் செய்ததற்கா பெருமாளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
பிறகு சமைக்க துவங்கலாம். சிலர் 21 வகை காய்கறிகளை பயன்படுத்தி சமைப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் என்ன முடியுமோ அதை சமைத்து, பெருமாளுக்கு தலிகை போட்டு நைவேத்தியம் செய்த பிறகு நாமும் சாப்பிடலாம்.
உணவில் நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய் நிச்சயம் இடம்பெற வேண்டும். துவாதசியில் அதிகாலையில் உணவு சாப்பிட்ட பிறகு, அன்று பகல் முழுவதும் உறங்கக்கூடாது. மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் விளக்கேற்றி வழிபட்ட பிறகு தான் தூங்க வேண்டும்.
குறிப்பு: ஏகாதசி விரதத்தின் போது எக்காரணம் கொண்டும் துளசியை பறிக்கக் கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடவேண்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…