விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் முடிந்தால் அடுத்தது என்ன? விநாயகரை ஆற்றில் கரைக்கும் விழா தான். மூன்று நாட்களாக ஆலயத்தில், வீட்டில் , ஊரின் முச்சந்தியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பின் மேளதாளத்துடன் ஊர்வலமாக விநாயகரை ஆற்றில் கரைப்போம். ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தி முடிந்ததும் நாம் இதை தான் செய்கிறோம், என்றாவது ஒரு நாள் இது வழிபாடு முறை எதற்கு ஏன் விநாயகரை ஆற்றில் கரைக்கிறோம் எனக் கேள்வி உங்களுக்கு எழுந்துள்ளதா? அப்படியொரு கேள்விக்கு பதிலாக இந்த பதிவு இருக்கும்.
விநாயகரை ஏன் ஆற்றில் கரைக்கிறோம்?
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்காக நம் வசதிக்கேற்ற மண்ணால் செய்த ஒரு விநாயகரை வாங்கி விரதம் இருந்து சிறப்பு ஆராதனை செய்து வழிபாடு செய்து, பின் தற்காலிகமாக வைத்து வழிபாடு செய்த விநாயகரை ஆற்றில் கரைப்பது தான் வழக்கமாகும். ஆனால் இதற்கு பின்னால் ஒரு அறிவியல் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா...!
பொதுவாக ஆடிப்பெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணலை நீரோடி அடித்து சென்றுவிடும், இப்படி மணல் கடலோடு சேர்வதால் ஆற்று நீர் மண்ணில் இறங்காது. இதன் விளைவாக நிலத்தடி குறையும், மனித வாழ்வும் சீர்குலையும்.
இதை தடுக்க மனிதக் குலம் தலைமுறைகள் கடந்து செழிக்க நம் முன்னோர்கள் இறை வழிபாட்டில் வைத்த அறிவியல் தான் இந்த தற்காலிக விநாயகர் சிலை ஆகும். என்ன புரியவில்லையா... தெளிவாக கூறுகிறோம் கேளுங்கள். ஆற்றில் நீர் நிலையாக இருந்தால் தான் நிலத்தடி நீர் அதிகரிக்கும். எனவே நம் முன்னோர்கள் நீர் ஆற்றில் தங்க கெட்டியான களிமண்ணை ஆற்றில் கரைத்தனர். இதை அடுத்த தலைமுறையினரும் பின்பற்ற ஆடி மாதத்தின் அடுத்த மாதமான ஆவணி சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்துடன் இந்த முறையை பின்பற்றினர்.
உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம், விநாயகர் சதுர்த்தி அன்றே நாம் சிலை ஆற்றில் கரைக்கலாமே.. ஏன் 3 முதல் 5 நாட்கள் கழித்து கரைக்க வேண்டும்? சரி தான், பொதுவாக நாம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தான் விநாயகர் சிலையை மண்ணால் செய்து இருப்போம், சிலை வெளியே கெட்டியாக இருந்தாலும் அதன் உள்ளே ஈரப்பதம் இருக்கும். அந்த ஈரப்பதம் காயத்தான் நாம் மூன்று நாட்களுக்கு பிறகு சிலை ஆற்றில் கரைக்கிறோம். கெட்டியான களிமண் அப்படியே ஆற்றின் அடிப்பகுதி வரை சென்று நீர் ஓட்டத்தைத் தடுத்து நீரை உறிஞ்சி நிலத்திற்கு அடியில் சேர்க்கும்.
நிலத்தின் அடியில் சேரும் நீர் பின்னாளில் நிலத்தடி நீராக மாறி நமக்கு நீர்வளத்தை உயர்த்தும். இதனால் தான் நாம் ஒவ்வொரு ஆண்டும் தற்காலிகமாக ஒரு விநாயகர் சிலை வாங்கி வழிபாடு செய்து பின் ஆற்றில் கரைக்கிறோம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…