இந்தியாவின் முதன்மை கோடீஸ்வரர்களில் ஒருவரான கெளதம் அதானியின் அதானி குழுமம் டெலிகாம் ஸ்பெக்ட்ரம் வாங்குவதற்கான பந்தயத்தில் நுழைய உள்ளதாக வெளியான தகவல் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சுனில் பார்தி மிட்டலின் ஏர்டெல் ஆகியவற்றுக்கு பேரிடியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐந்தாம் தலைமுறை அல்லது அதிவேக இணைய இணைப்பு போன்ற 5G தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் திறன் கொண்டவைக்காக ஜூலை 26 ஏர்வேவ் ஏலத்தில் பங்கேற்பதற்காக நான்கு நிறுவனங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளன. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா என டெலிகாம் துறையில் ஏற்கனவே இருக்கும் மூன்று தனியார் நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பித்துள்ளன.
அதே நேரத்தில் நான்காவது விண்ணப்பதாரராக தேசிய நீண்ட தூரம் (NLD) மற்றும் சர்வதேச நீண்ட தூர (ILD) உரிமங்களை சமீபத்தில் பெற்ற அதானி குழுமம் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஏல காலக்கெடுவின்படி, விண்ணப்பதாரர்களின் உரிமை விவரங்கள் ஜூலை 12 ஆம் தேதி அன்று வெளியிடப்படும். அப்போது இது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொள்ள முடியும்.
குஜராத்தைச் சேர்ந்த அம்பானியும் அதானியும் மெகா வணிக சாம்ராஜ்யங்களை கட்டியெழுப்பியிருந்தாலும், இதுவரை இருவரும் நேருக்கு நேர் மோதவில்லை. அம்பானி குழுமம் எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் வணிகத்திலிருந்து தொலைத்தொடர்பு மற்றும் சில்லறை வணிகத்திற்கு விரிவடைந்த நிலையில், அதானி குழுமம் துறைமுகங்கள் பிரிவில் இருந்து நிலக்கரி, எரிசக்தி விநியோகம் மற்றும் விமானப் போக்குவரத்துக்கு பன்முகப்படுத்தப்பட்டது.
ஆனால் சமீப காலங்களில் நேருக்கு நேர் மோத அதானி தயாராகி விட்டதாகத் தெரிகிறது. அதானி சமீப மாதங்களில் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையில் ஒரு துணை நிறுவனத்தை அமைத்துள்ளது இதற்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
இதற்கு பதிலடியாக சோலார் பேனல்கள், பேட்டரிகள், பச்சை ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல்களுக்கான ஜிகா தொழிற்சாலைகள் உட்பட புதிய ஆற்றல் வணிகத்திற்கான பல பில்லியன் டாலர் திட்டங்களை அம்பானியும் அறிவித்துள்ளார். 2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளராக இருக்கும் திட்டங்களை முன்னர் அறிவித்த அதானி, ஹைட்ரஜன் எரிபொருள் லட்சியங்களையும் வெளியிட்டார்.
இந்நிலையில், ஜூலை 26 அன்று அதானி குழுமம் 5ஜி ஏலத்தில் பங்கேற்றால், அது அம்பானியுடன் முதல் நேரடி போட்டியாக இருக்கும். அதானி வருகை உறுதி செய்யப்பட்டால் 4ஜி சேவையை மூலை முடுக்கெல்லாம் ஜியோ கொண்டு சேர்த்ததைப் போல், அதானி 5ஜி சேவையில் புதிய புரட்சியை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…