LIC share price : இந்திய பங்குச் சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ பங்கு வெளியீடு இன்று நடந்த நிலையில் சமீபத்தில் வெளியான பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் ஐபிஓக்களைப் போலவே முதல் நாளில் குறைவான விலையில் விற்கப்பட்டுள்ளது பங்கு வர்த்தகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மாலை நிறைவடைந்த மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 54,318 இல் நிறைவடைந்தது. இதேபோல் தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 400 புள்ளிகள் உயர்ந்து 16,259 புள்ளிகளில் நிறைவடைந்தது. கடந்த 3 மாதங்களில் இது ஒரு நாளைய மிக அதிகபட்ச உயர்வாகும்.
இருப்பினும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஐசி ஐபிஓ அரசாங்கத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட பங்கு விலையான ரூ.949க்கு பதிலாக ஒரு பங்கிற்கு ரூ.867 என பட்டியலிடப்பட்டன. மாலை பங்கு வர்த்தகம் நிறைவடையும்போது எல்ஐசி பங்குகள் ரூ 875.45 இல் முடிவடைந்தது. இது பங்கு விலையை விட கிட்டத்தட்ட 8 சதவீதம் குறைவாக இருந்தது.
ஈக்விட்டி மாஸ்டரின் ஆராய்ச்சி இணைத் தலைவரான தனுஸ்ரீ பானர்ஜி கருத்துப்படி, "எல்ஐசியின் பங்குகள் பங்குச்சந்தையில் வெளியாவது ஆயுள் காப்பீட்டுத் துறையில் கணிசமான முதலீட்டாளர் ஆர்வத்தைக் கொண்டுவரும். வலுவான தனியார் துறை காப்பீட்டு நிறுவனங்கள், எல்ஐசி உடனான போட்டியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம். எல்ஐசியின் வணிக மாதிரியானது தனியார் துறை காப்பீட்டு நிறுவனங்களில் இருந்து நடுத்தர காலத்தில் மிகவும் வேறுபட்டதாக தொடரலாம்." எனத் தெரிவித்துள்ளார்.
கடும் வீழ்ச்சியில் இந்திய ரூபாய் மதிப்பு
இன்றைய பங்குவர்த்தக முடிவில், இந்திய ரூபாயின் மதிப்பு புதிய வீழ்ச்சியைத் தொட்டு, அமெரிக்க டாலருக்கு எதிராக இதுவரை இல்லாத அளவு ரூ.77.56 ஆக குறைந்தது. இந்நிலையில், சந்தையில் டாலரை விற்பதன் மூலம் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கவனம் பெற்ற பங்குகள்
இந்திய பங்குச்சந்தைகளின் அனைத்து துறை குறியீடுகளும் இன்று வர்த்தக நேர முடிவில் வளர்ச்சியுடன் முடிவடைந்தன, நிஃப்டி மெட்டல் அதிக லாபம் ஈட்டியது. இது மட்டும் கிட்டத்தட்ட 7 சதவிகிதம் அதிகரித்தது. மேலும், நிஃப்டி50 இல் உள்ள அனைத்து 50 பங்குகளும் வளர்ச்சியுடன் முடிவடைந்தன. நிஃப்டியில் ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், கோல் இந்தியா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் மற்றும் ஓஎன்ஜிசி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
சென்செக்ஸில் டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி, விப்ரோ ஆகிய நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டின. சென்செக்ஸில் உள்ள டாப் 30 பங்குகளும் வளர்ச்சியுடன் முடிவடைந்தன. உலோக துறையைத் தவிர, எண்ணெய் மற்றும் எரிவாயு, ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சிறப்பாகச் செயல்பட்டன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…