சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே புத்தர கவுண்டன் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் மளிகை கடை நடத்தி வருபவர் விஜயா(வயது78). இவர் கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத ஒரு ஆணும், பெண்ணும் தண்ணீர் கேட்பதுபோல் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அப்போது திடீரென விஜயாவின் வாயை பொத்திய அவர்கள், அணிந்திருந்த தங்க செயின், வளையல்கள் உள்ளிட்ட ஏழு சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தப்பித்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து மூதாட்டி விஜயா கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஏத்தாப்பூர் போலீசார், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் உத்தரவின் பேரில் வாழப்பாடி டிஎஸ்பி ஹரிசங்கரி தலைமையில் தனிப்படை அமைத்து அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோவில் நுழைவாயில் பகுதியில் ஏத்தாப்பூர் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக அவர் பதில் அளித்ததை அடுத்து, அவரையும் அவருடன் இருந்த பெண்ணையும் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அந்த நபர் விழுப்புரம் மாவட்டம் திருமலைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுப்பு மகன் சுபாஷ் (வயது22)என்பதும், அவருடன் வந்த பெண் சுபாஷின் சித்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த சாமுவேல் மனைவி மோனிஷா (வயது32) என்பதும் தெரிய வந்தது.
இருவரும் கோயம்புத்தூர் பஜார் தெரு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து சென்னை செல்லும் வழியில் புத்தரகவுண்டன்பாளையத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
மேலும், இவர்கள் குடும்பத்தோடு சென்னை கே.கே நகர் பகுதியில் பானி பூரி கடை வைத்து நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது. இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஏழு சவரன் தங்க நகைகளையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…