சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுத் திரியும் மாடுகளால் ஏற்படும் தொல்லைகளை கட்டுப்படுத்த மாநகராட்சி புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதன்படி சாலைகளில் சுற்றித் திரியும் மாடு ஒன்றுக்கு வசூலித்து வந்த அபராத தொகை ரூ.1550'இல் இருந்து ரூ.3000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் சுற்றித் திரியும் மாடுகளால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. தற்போது தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களில் அடைக்கப்படுகிறது.
மேலும் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதத் தொகையாக மாடு ஒன்றிற்கு ரூ.1,250 ரூபாய் அபராத தொகை மற்றும் ரூ.300 பராமரிப்புக்காக என மொத்தமாக ரூ.1,550 விதிக்கப்பட்டு வந்தது.
இதன்படி கடந்த 2021 ஜூலை 7ஆம் தேதி முதல் 2022 ஜூன் 30 ஆம் தேதி வரை மட்டும் மொத்தமாக 4,099 மாடுகள் பிடிக்கப்பட்டு 61.63 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இருந்தும் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் தொல்லை குறைந்தபாடில்லை.
இந்நிலையில் தற்போது இந்த அபராதத் தொகையை ரூ.1,550இல் இருந்து ரூ.3,000 ஆக மாநகராட்சி உயர்த்தி உள்ளது. எனவே இனி மேல் மாடு பிடிபட்டால் 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அந்த மாட்டின் காதில் மாநகராட்சி வரிசை எண் பொருத்தப்படும் என்றும், அதே மாடு மீண்டும் பிடிக்கப்பட்டால் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…