சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சட்டவிரோதமாக வீட்டில் வைத்து மது விற்பனை நடைபெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் அண்மையில் கள்ளசாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கள்ள சாராயம் மற்றும் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.
அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் உத்தரவின் பேரில், காவல்துறையினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ள சாராயம் மற்றும் சட்டவிரோதமான மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணித்துவருகின்றனர். இந்த நிலையில், ஓமலூர் அடுத்த தாரமங்கலம் பகுதியில் தெசவிளக்கு மாட்டையாம்பட்டி பகுதியில் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்றும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், ஒரு பெண் ஒருவர், மது பாட்டிலை அவரது வீட்டின் அருகில் மறைத்து வைத்து, குடிமகன்கள் வந்து கேட்கும்போது எடுத்துக்கொடுத்து அதற்கான பணத்தை வசூலிக்கிறார். பட்டப்பகலில் சட்டவிரோதமாக பெண் ஒருவர் மது விற்பனை செய்யும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சேலம் மாவட்டத்தில் தீவிர காண்காணிப்பு இருந்தும், காவல்துறையினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, நடைபெற்றுவரும் இந்த சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…