மதுரை ஆவின் பாலகத்தில் ஐஸ்கிரீம் உற்பத்தி, மற்றும் பால் பாக்கெட், பால்கோவா, நெய் போன்ற பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மதுரை ஆவின் பாலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மனோ.தங்கராஜ், பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் கறவை மாடு வாங்குவதற்கு கடன் உதவியாக 50 பேருக்கு தலா ஐம்பதாயிரம் விகிதம் 25 லட்சத்தை வழங்கினார். இதைத் தொடர்ந்து, உத்தம நாயக்கனூரில் உள்ள உறுப்பினர்களுக்கு கறவை மாடு வாங்க கடனாக 25 நபர்களுக்கு தலா 50 ஆயிரமும், கோட்டநத்தம்பட்டி பகுதியில் 26 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் 13 லட்சமும் கடனுதவி வழங்கிய அமைச்சர், வீரபெருமாள் பட்டி சங்கத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரமும், தாட்கோ நிதி திட்டத்தில் மூன்று நபர்களுக்கு 60 ஆயிரம் ரூபாயும், அதேபோல் பராமரிப்பு கடன் உதவியாக 31 நபர்களுக்கு ரூ 4 லட்சத்து 34 ஆயிரம் என மொத்தம் 135 நபர்களுக்கு ரூ 57 லட்சத்து 94 ஆயிரத்தை நிதியுதவியாக அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ.தங்கராஜ், வரும் காலங்களில் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்த ஆவின் ஐஸ்கிரீம் அனைத்து இடங்களிலும் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஆவின் ஐஸ்கிரீமுக்கு அதிக வரவேற்பு உள்ளது. 10 சதவீதத்திற்கு மேலாக உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இந்த உற்பத்தியை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நமது அரசு கடன் உதவிகளை வழங்குவது மட்டுமின்றி, மாடுகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டால், அவற்றை குணமாக்கவும், தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் தீவிரம் காட்டியிருக்கிறோம்.
முன்பைவிட தற்போது ஆவின் பால் உற்பத்தி ஏறுமுகத்தில் உள்ளது. மேலும் ஒரு மாநில பால் உற்பத்தியில் மற்றொரு மாநிலம் தலையிடக்கூடாது என்பது எங்களின் கருத்து. எனவே, அமுல் நிறுவனம் வருவதினால் ஆவின் பால் உற்பத்தி குறையாது. மாறாக அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…