சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திரைக்கலைஞர், உரைக்கலைஞர், திராவிடக் கலைஞர் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ், பொன்வண்ணன், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது மேடையில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது,
தமிழகத்தை மணிப்பூர் போன்று மாற்ற சிலர் நினைப்பதாக சொன்னார்கள். தமிழகம் ஒன்றும் மணிப்பூர் இல்லை, தனிப்போர், திராவிடம் என்ற போர், இங்கே அவர்கள் பருப்பு இங்கே வேகாது. அவர்களுக்கு தொல்லை நானோ,வழக்கறிஞர் அருள்மொழி போன்றவர்களோ இல்லை, அவர்களுக்கு தொல்லையே அமைச்சர்கள் சேகர்பாபு போன்றவர்கள் தான்.
அமைச்சர் சேகர்பாபு அவசரப்பட்டு எம்.எல்.ஏ.வுக்கு நின்று விட்டார். எம்.எல்.ஏ.வாக ஆகாமல் எம்.பி-யாக ஆகியிருந்தால் மத்தியில் சென்று மத்திய அறநிலையத்துறை அமைச்சராகி சிலருக்கு பெரிய தொந்தரவாக இருந்திருப்பார். கலைஞர் கருணாநிதி வசனத்தில் நான் நடிக்கும் வாய்ப்பை வாங்கி கொடுத்தவர் தந்தை பெரியார். நான் பெரியார் கொள்கைக்காரன், எம்.ஜி.ஆர் ரசிகன் என்று அப்போது சிலருக்கு தெரியாது. பாலைவனம் ரோஜாக்கள் படத்தில் நான் நடிப்பதை தடுத்து நிறுத்த சிலர் முயற்சித்தார்கள். ஆனால் நான் பெரியாரின் கொள்கைக்காரனாக இருந்ததால் வாய்ப்பு கிடைத்தது.
சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்று கொண்டு வந்தவர் கருணாநிதி. இதற்காகவே பெண்கள் கருணாநிதியின் ஆதரவாளராக இருக்க வேண்டும். கல்வி,வேலைவாய்ப்பை கொடுத்து விட்டால் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்துவிடும் என்று போராடியவர் கருணாநிதி. பல சட்டங்களுக்கு தமிழகம் முன்னோடியாக இருந்துள்ளது. தற்போதைய அரசாங்கம் துணிச்சலான அரசாங்கம். துணிச்சலை 10 பக்கம் வசனம் எழுதியும் காட்டத் தெரியும். முதல்வர் ஸ்டாலினை போல உதட்டாலயே துணிச்சலை காட்ட முடியும். சட்டசபையில் கவர்னர் எழுந்து சென்ற போது பல்லு தெரியாமல் சிரித்து துணிச்சலை காட்டியவர் முதல்வர் ஸ்டாலின்.
திராவிடம், திராவிட மாடல் என்பது வெறும் வார்த்தை மட்டும் அல்ல அது சித்தாந்தம். சித்தாந்தத்தை விட்டு வெளியே வர முடியாது. தனி நபர் மீது விமர்சனம் வரலாம் ஆனால் சித்தாந்தம் மீது விமர்சனம் வரவே முடியாது. ஏனென்றால் அனைத்து மக்களும் சமமாக இருக்க வேண்டும் கல்வி வேலைவாய்ப்பில் நிரந்தர இடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற இயக்கம் தான் திராவிட மாடல் அரசாங்க இயக்கம். திராவிடத்திற்கு துணிச்சலான தலைமை வந்து கொண்டு தான் இருக்கிறது. வாரிசு என்பதற்காக மட்டும் அந்த தலைமை கிடைத்து விடாது. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் 15 வயதில் கையில் கொடியுடன் சுற்றியவர்.
இவ்வாறு, சத்யராஜ் பேசினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…