சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தல் வழக்கில் பாஜக பிரமுகர் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2020இல் சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை அவரது உறவினர் ஷகிதா பானு என்பவர் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பின்னர், வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் 26 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் சிறுமியின் உறவினர் ஷகிதா பானு மற்றும் இவருக்கு உடந்தையாக இருந்த பாஜக பிரமுகர் ராஜேந்திரன், எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி மஉள்ளிட்டோர் அடங்குவர்.
26 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், இதில் 22 பேர் மட்டுமே 2020இல் கைது செய்யப்பட்டனர். மீதி 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். கைது செய்யப்பட்ட 22 பேரில் மாரீஸ்வரன் என்பவர் விசாரணை நடந்துவந்த காலத்திலேயே இறந்து விட்டார்.
இதையடுத்து மீதமுள்ள 21 பேர் மீது போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில், நீதிபதி ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் புகழேந்தி, மதன்குமார், சாயிதாபானு, சந்தியா, செல்வி, கார்த்திக், மகேஸ்வரி, வனிதா, விஜயா, அனிதா (எ) கஸ்தூரி, ராஜேந்திரன், காமேஸ்வரராவ், முகமது அசாருதீன், பசுலுதீன், வினோபாஜி, கிரிதரன், ராஜாசுந்தர், நாகராஜ், பொன்ராஜ், வெங்கட்ராம் (எ) அஜய் கண்ணண் ஆகிய 21 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்துள்ளார். மேலும் இவர்களுக்கான தண்டனை விபரங்கள் வரும் 19 ஆம் அறிவிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மாரி, பாஷா, முத்துபாண்டி மற்றும் மீனா ஆகிய 4 பேருக்கு எதிரான வழக்கு தனியாக பிரித்து விசாரிக்கபடும் என நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…