பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய் நியாய விலைக் கடைகளில் நேரடியாக மட்டுமே வழங்கப்படும், வங்கி மூலம் வழங்கும் உத்தேசம் தற்போது இல்லை என அமைச்சர் பெரியகருப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் சக்கரபாணி ஆகியோர் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர். இதில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்க முதல்வர் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பினை நிறைவேற்றுகின்ற பொறுப்பு உணவுத்துறைக்கும், கூட்டுறவு துறைக்கும் உள்ளதாகவும் அது பற்றிய நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றது என்பதை இன்று ஆய்வு செய்வதாகவும் கூறினார்.
மேலும் பேசிய அவர் பொங்கல் தொகுப்பை முறையாக வழங்க வேண்டும் கடைகளில் பணியாற்றுபவர்களுக்கு எந்த விதமான சிக்கல்களும் இருக்கக் கூடாது என்பதற்காக நேற்று முதல் அனைத்து கடைகளிலும் டோக்கன் வழங்கப்படுவதாகவும் 8ஆம் தேதி வரை டோக்கன் விநியோகம் நடைபெற உள்ளதாகவும் 9ஆம் தேதி முதல்வர் சென்னையில் ஏதாவது ஒரு இடத்தில் இந்தத் திட்டத்தை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் இருக்கக்கூடிய 35 ஆயிரம் நியாய விலை கடைகளில் தற்போது 4,45 கடைகள் ஐஎஸ்ஓ தரச் சான்று பெற்ற கடைகளாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய கடைகள் தமிழகம் முழுவதும் இரண்டு ஆண்டு காலத்திற்குள் படிப்படியாக இதே தரத்தில் மேம்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.
பொங்கலுக்கு வழங்கப்படும் ரொக்கம் ரூபாய் ஆயிரம் பொருட்கள் வழங்கும்பொழுது நியாய விலை கடைகளில் வழங்கப்படும் வங்கிகளில் தற்போது கொடுக்கின்ற உத்தேசம் இல்லை எனக் கூறிய அவர் குறைபாடு இல்லாமல் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்படும் அதில் சுட்டிக்காட்டும் அளவிற்கு ஏதாவது தவறு நடந்திருந்தால் ஆதாரத்துடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…