திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தாய் மற்றும் 8 வயது மகன் குட்டையில் மூழ்கி பரிதாபமாக மரணம்.
தாராபுரத்தை அடுத்த சின்னபுத்தூர் மைனர் காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி சக்திவேல் மற்றும் சந்திரகலா தம்பதிக்கு விநோதர்ஷன் என்னும் 8 வயது மகன் உள்ளார். சோளம் சாகுபடி செய்யும் சக்திவேல், பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச 12 அடி ஆழமுள்ள செயற்கை பண்ணைக் குட்டையையும் அமைத்துள்ளார். அந்த குட்டை எப்போதுமே தண்ணீர் நிரப்பி இருக்கும். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சோள தட்டைக்கு தண்ணீர் பாய்ச்ச மூவரும் சென்றுள்ளனர்.
குட்டைக்கு பக்கத்தில் இருக்கும் மோட்டாரை ஆஃப் செய்ய சந்திரகலா மற்றும் மகன் இருவரும் சென்றுள்ளனர். அப்படி போகும் போது மகன் தவறி குட்டையில் விழுந்து தத்தளித்துள்ளார். மகனை காப்பாற்ற சந்திரகலா உள்ளே குதிக்க, இருவருக்கும் நீச்சல் தெரியாததால் அங்கிருந்து தப்பிக்க நீண்ட நேரம் முயற்சித்துள்ளனர். என்னடா போய் ரொம்ப நேரம் ஆச்சு, ரெண்டு பேத்தையும் காணோமே என்று அவர்களை தேடி வந்தார் சக்திவேல்.
பிறகு இருவரும் மூழ்கி இருந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை மேலே கொண்டு வந்தனர். மனைவி ஏற்கனவே இறந்த நிலையில், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மகனும் உயிரிழந்த சோகம் அப்பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…