மதுரை: தமிழகத்தில் அரசியல் சூனியத்தை ஏற்படுத்தினாலும் பாஜகவோடும், பாமகவோடும் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் - திருமோகூர் காயாம்பட்டி-கள்ளந்தரி-இளமனூர் நைத்தான்பட்டி-கிடாரிப்ட்டி-எறம்பட்டி-மைத்தான்பட்டி ஆகிய பகுதிகளில் தொடரும் சாதிய வன்கொடுமைகள் மற்றும் திருப்பரங்குன்றம் ரம்யா சாதிய ஆணவப்படுகொலையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரை புதூர் பேருந்து நிலைய பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மதுரை திருமோகூரில் நடந்த சாதிய வன்முறையை கண்டித்து ஒத்தக்கடை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் பதற்றம் உருவாகும் என்பதால்தான் மதுரை மாநகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இது மற்ற சமூகத்தினருக்கு புரிந்துகொள்ள வேண்டும்.
மதுரை திருமோகூரில் போதைக்கு அடிமையாகவும், கஞ்சாவிற்பு அடிமையாகவுள்ள சில இளைஞர்கள் தான் வன்முறைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறார்கள். தமிழகம் முழுவதும் இதுபோன்று ஒரு சில இளைஞர்கள் கும்பல்களால்தான் பிரச்சனை நடக்கிறது. காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுத்தால் இரு தரப்பு சமூக மோதலை தடுத்து சமாதானம் ஏற்படும். மதுரை மாவட்டதில் அண்மை காலமாக பல்வேறு பகுதிகளில் தலித் மக்கள் மீதான வன்கொடுமை தாக்குதல் அதிகரித்துவருகிறது. இந்த ஆர்ப்பாட்டம் அரசியல் உள்நோக்கமோ, காவல்துறைக்கு எதிரான போராட்டமோ இல்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருப்பதற்காகத்தான். சிலர் இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழக அரசுக்கு எதிராக என கூறுவார்கள் அதனை கண்டுகொள்ள கூடாது. படுகொலைகள், தாக்குதல்கள், பாலியல் பலாத்காரங்கள் போன்றவற்றை தடுக்க நினைக்கு குரல் கொடுக்கின்றோம்
விசிக கொடிகம்பம் கூட அதிக உயரத்திற்கு ஏற்றினால் போராட்டம் நடத்துகின்றனர். இதற்கும் பாமக தலைவர்கள் ஆதரவு தெரிவிக்கும் மனநிலையில் உள்ளனர். கொடி கம்பம் ஏற்ற விடாமல் போராட்டம் நடத்துங்கள் என்ற பாமக தலைவர்கள் கூறுகின்றனர்.கட்சியினர் வற்புறுத்தினாலும் காவல்துறை அனுமதி இன்றி எங்கும் கொடியேற்ற மாட்டேன் என கூறுவேன், அதில் பிடிவாதமாக இருப்பேன். வன்னிய சமூக மக்கள் ஏதோ ஒரு தூண்டுதலுக்கு ஆளாகின்றனர். கடலூரில் 1997 - 1998 ஆம் ஆண்டுகளில் கருப்பாய் இருந்தால் தலித்தாக இருப்பார்கள் என கூறி கடலூரில் காவல்துறையினர் கைது செய்தார்கள். எந்த இடத்திலும், முக்குலத்தோர், வன்னியர், கவுண்டர் சமூகத்திற்கு எதிராக வன்முறையை தூண்டியதாக ஒரு ஆதாரம் காட்ட முடியாது.
தமிழகத்தில் காதல் தி்ருமணங்களுக்கு நான் தான் காரணம் என்கிறார்கள், நான் பிறப்பதற்கு முன்பாக காதல் திருமணங்கள் நடைபெறவில்லையா? என் ஒருவனை எதிர்ப்பதாக தமிழகம் முழுவதும் கூட்டங்களை போட்டவர் ராமதாஸ். தமிழகத்தில் சாதிய அமைப்புகளை அரசியல் கட்சியாக மாற்றியது ராமதாஸ்தான். தமிழகத்தில் சாதிய பிற்போக்கவாதிகளின் தந்தை, வழிகாட்டி ராமதாஸ். சமூக நீதி, சாதிய ஒழிப்பு, தமிழ்தேசியம், பெண் விடுதலை பேசிய மண்ணில் நீயா நானா என சாதியம் பேசும் அரசியல் உருவானது ராமதாஸால்தான். தர்மபுரி வன்முறைக்கு காரணம் ராமதாஸ்தான். ராமதாஸ் மீது அதீத மதிப்பு வைத்திருத்தேன் தர்மபுரி கலவரத்திற்கு பின்புதான் ராமதாஸ் சாதிய ரீதியான எண்ணம் வெளிவந்தது.
பாப்பாபட்டி , கீரிப்பட்டி, மேலவளவு ஆகிய ஊராட்சிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத நிலையிலும் மேலவளவில் 7 படுகொலைகள் நடந்தபோதிலும் மீண்டும் தலித் ஊராட்சி மன்ற தலைவர்தான் அங்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மேல்பாகம் திரௌபதி அம்மன் கோவிலி்ல் சாமி தரிசனம் செய்வதை அனுமதிக்காமல் அவரை தடுத்து, பிரச்சனையை உருவாக்குவது சொந்த சாதியின் உணர்வுகளை தூண்டிவிட்டு தவறாக வழி நடுத்துகிறீர்கள் என்றுதான் பேசுகிறேன்.
சாதிய அடிப்படையில் இயங்கும் பாமகவும், RSSம் ஒன்று தான். பாமகவின் அரசியலை அம்பலபடுத்தினேன் தவிர பாலுவைதான் பேசினேனே தவிர வன்னிய சமூகத்தினர் குறித்து பேசவில்லை. அரசியல் சூனியம் ஏற்படுத்தினாலும் பாஜகவோடு, பாமகவோடு எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம். தமிழகத்தில் திமுக கூட்டணி இருப்பது போல் இந்தியா முழுவதும் பாஜகவிற்கு எதிராக கூட்டணிகள் அமைய வேண்டும்' இவ்வாறு அவர் பேசினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…