Erode latest news : தமிழகத்தில் பஞ்சு ஏற்றுமதியை தடுத்து விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரசின் இலவச வேட்டி சேலை உற்பத்தியில் 40 % உற்பத்தி ஈரோடு சுற்றுவட்டார பகுதிகளில் தயாரிக்கப்படுகிறது. இதற்காக விசைத்தறிகள் ஷிப்டு முறையில் 24 மணி நேரமும் இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் தாக்கம் காரணமாக விசைத்தறிகள் கடுமையான பாதிப்படைந்துள்ளது. அதேபோல் ஜவுளித்தொழிலும் கடுமையான பாதிப்பை சந்தித்தது.
இதனையடுத்து, தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த ஜவுளி மற்றும் விசைத்தறிகள் தற்போது பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் விசைத்தறி, உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். மேலும், வரலாறு காணாத பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வால் ஜவுளித்துறை ஸ்தம்பித்து நிற்கிறது.
அதன்படி, 45 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு கண்டி பஞ்சு தற்போது 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விலை உயர்ந்துள்ளது. அதன்படி, நூல் விலையும் அபரிமிதமாக உயர்ந்து ஜவுளி வணிகத்தை நிலைகுலைய வைத்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு 180 ரூபாய்க்கு வாங்கிய 1 கிலோ நூல் தற்போது 400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நூல் விலையேற்றத்தால் தடுமாறிய ஜவுளி உற்பத்தியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இதனால் பாதிக்கப்பட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் பெரும் இழப்பை தாக்குபிடிக்க முடியாமல் தொழிலை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், ஈரோடு பகுதியில் மட்டும் தொழிலை தொடர முடியாமல் கடந்த 7 மாதத்தில் மட்டும் 5 ஆயிரம் விசைத்தறிகளை விற்பனை செய்துள்ளனர்.
இதில், பல விசைத்தறிகளை அடிமாட்டு விலைக்கும், பழைய இரும்பு கடைக்கு எடை போட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 5 சதவீதம் இது போன்று விற்பனை செய்யப்பட்டதாக கூறுகின்றனர் விசைத்தறியாளர்கள் சங்கத்தினர்.
இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் அமைப்புச் செயலாளர்கள் கந்தவேல், பஞ்சு, நூல் விலை உயர்வு காரணமாக நஷ்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டனர். விசைத்தறி கூடங்களும் ஒவ்வொன்றாக விற்பனை செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7 மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் 3000 விசைத்தறிகள் விற்கப்பட்டதாகவும் 2000 விசைத்தறிகள் உடைக்கப்பட்டு இரும்பு கடைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
இதனால், தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் இதற்கு உடனடி தீர்வு எடுக்க வேண்டும் என கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…